தூத்துக்குடியை வெல்வாரா பி.எச்.பாண்டியனின் மனைவி?
59 வயதாகும் சிந்தியா பாண்டியன், பி.எச்.டி முடித்தவர். நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக 2005 முதல் 08 வரை பணியாற்றியவர்.
கிறிஸ்தவ நாடார் சமூகத்தைச் சேர்ந்த இவரது பதவிக்காலத்தின்போது பல்கலைக்கழகம் ஏற்றம் பெற்றது.
கணவர் பி.எச்.பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் உள்பட நான்கு குழந்தைகள்.
பி.எச்.பாண்டியன், சேரன்மகாதேவி சட்டமன்ற தொகுதியில் 6 முறை போட்டியிட்டு 4 முறை வெற்றி பெற்றவர். இவர் 99-ம் ஆண்டு நெல்லை பாராளுமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.
மகன் மனோஜ்பாண்டியன் 2001ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக சேரன்மகாதேவி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரும் தந்தையை போலவே பல்வேறு திட்டங்களை தொகுதியில் நிறைவேற்றியுள்ளார். 2006ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங் வேட்பாளர் வேல்துரையிடம் போ்ட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அதிமுக ஆட்சியின்போதுதான் 2005ம் ஆண்டு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக்கத்தில் துணை வேந்தராக சிந்தியா பாண்டியன் அறிவிக்கப்பட்டார்.
அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும் சிந்தியா பாண்டியன் அதிமுகவில் உறுப்பினரானது எப்போது என்று தெரியவில்லை. இருப்பினும் கிறிஸ்தவ நாடார் வாக்குகள் நிறைந்த தொகுதி என்பதால், தூத்துக்குடி வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து சிந்தியா பாண்டியன் கூறுகையில், தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளராக என்னை அறிவித்த புரட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கு என் நன்றி.
அம்மா வழியில் தமிழகம் முழுவதும் பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன். தூத்துக்குடி மக்களின் தேவைகளை ஆராய்ந்து பணியாற்றுவேன்.
குறையின்றி தொகுதி முழுவதும் நிறைவு பெறவும் சிறந்த எம்.பி என்று என்னை பொதுமக்கள் பாராட்டும்படி செயல்படுவேன். பொதுமக்கள் அவர்களின் சகோதரியாக என்னை பார்த்து வாக்களிக்க வேண்டும் என்றார்.