பாஜக அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கு-விசாரிக்காத போலீசுக்கு நீதிமன்றம் கண்டனம்
சென்னை: 2007ம் ஆண்டு சென்னையில் பாஜக அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கை விசாரிக்காமல் உட்கார்ந்திருக்கும் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு மாதத்துக்குள் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறும் அது உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி ராமர் பாலம் என்று ஒன்று இருந்ததற்கான ஆதாரம் இல்லை என தெரிவித்தார். இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் ராம் விலாஸ் வேதாந்தி என்பவர் முதல்வர் கருணாநிதியின் தலையையும், நாக்கையும் வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு தங்கம் பரிசளிக்கப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து கொந்தளித்த திமுகவினர் சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தை அடித்து சூறையாடினர்.
இது தொடர்பாக பாஜக சார்பில் போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால், போலீசார் புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், புகார் வாங்கி கொண்டதுக்கு எந்த ரசீதும் வழங்கவில்லை என்றும் பாஜக குற்றம் சாட்டியது.
இதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் மாநில அரசுக்கு கீழ் பணிபுரியாத தனி அமைப்பு ஒன்றின் மூலம் விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயபால், போலீசார் இந்த வழக்கில் பாகுபாடு காட்டியுள்ளனர். அவர்கள் முழுமையாக விசாரிக்க வேண்டும். போலீசார் ஒரு மாத காலத்துக்குள் இவ்வழக்கு தொடர்பான விசாரணையை முடித்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
விசாரணையை துவக்க போலீசார் இந்த உத்தரவின் நகலுக்காக கூட காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. உடனடியாக உத்தரவை துவக்க வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications