மதுரையை 'மாடல்' நகராக மாற்றுவேன்-அழகிரி
மதுரை: மதுரையை மாடல் நகராக மாற்றுவேன் என திமுக வேட்பாளரும் தென் மண்டல அமைப்புச் செயலாளர் அழகிரி உறுதி அளித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளர் அழகிரி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மோகன் நிற்கிறார்.
இந்நிலையில் அழகிரி நிருபர்களிடம் பேசுகையில்,
நான் எம்பியாக தேர்வு செய்யப்பட்டால் பொது மக்கள் குறை கேட்பு மையம் அமைக்கப்பட்டு, அங்கு எந்த நேரத்திலும் மக்கள் என்னை சந்தித்து குறைகளை சொல்லலாம். அவை உடனுக்குடன் தீர்த்துவைக்கப்படும்.
மதுரையை சுத்தமான, பசுமையான, மின்மயமான தொகுதியாக மாற்றுவேன். கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, அடிப்படை வசதிகள், தண்ணீர், சுற்றுலா, சாலை வசதி போன்றவற்றில் 100 சதவீதம் உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தருவேன்.
விரைவில் தொழில்நுட்ப பூங்கா...
நகரில் இருக்கும் முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பேன். மதுரையில் சுமார் 1 லட்சம் மரங்கள் நடப்படும். இங்கு விரைவில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.
மதுரை விமான நிலையத்தின் தரம் சர்வதேச அளவுக்கு உயர்த்தப்படும். கொழும்பு, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் மத்திய கிழக்கு ஆசியாவுக்கு இங்கிருந்து விமானங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்படும்.
கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர்...
மதுரையில் இருந்து கொடைக்கானல், ராமேஸ்வரம், கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டர் சேவை துவக்கப்படும். மத்திய, மாநில அரசின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்பேன். தொடர்ந்து ஏழைகளுக்காக பாடுபடுவேன் என்றார்.
(தென் தமிழகத்தில் சகல அதிகாரத்துடன் இருக்கும் அழகிரி இந்த உறுதிமொழிகளில் கால்வாசியையாவது கடந்த 3 வருடத்தில் செய்திருக்கலாமே..!)
கலவரத்தை தூண்டுகிறது மார்க்சிஸ்ட்...
மேலும் அவர் கூறுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தினம் தினம் புகார் கொடுக்கின்றனர். இதை விட்டால் அவர்களுக்கு வேறு வேலையே இல்லையா. அவர்கள் கலவரத்தை ஏற்படுத்த முன் கூட்டியே திட்டமிட்டு செயல்படுகின்றனர்.
கொடிகள், போஸ்டர்கள், பேனர்களை பயன்படுத்தக கூடாது என்பது தேர்தல் விதி. ஆனால் மதுரையில் ஏப்ரல் 6ம் தேதி நடத்திய ஆர்பாட்டத்தில் கட்சி கொடிகள் போஸ்டர்களை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications