ஒருமுறை மாத்தி போடுங்க, சரியாகிடும்..விஜயகாந்த்
பழனி: இலங்கையில் மருத்துவமனை, பள்ளிக்கூடம், கோவில்கள், பல்கலைக்கழகம் என்று சட்டத்தை மீறி குண்டு வீசுகிறார்கள். அவர்களுக்கு தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு கொடுக்கின்றன. இதற்கு காரணம் மக்கள்தான். மக்கள் ஒரு முறை ஓட்டை மாற்றிப்போட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
திண்டுக்கல் தே.மு.தி.க. வேட்பாளர் முத்துவேல்ராஜை ஆதரித்து விஜயகாந்த் ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி சட்டசபை தொகுதிகளில் நேற்று பிரசாரம் செய்தார்.
பழனி பஸ் நிலையப் பகுதியில் அவர் கூடியிருந்த பெரும் திரளான தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், இலங்கை தமிழர்களையும் வாழ வைக்க மாட்டீர்கள். குரல் கொடுக்க மாட்டீர்கள்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்காக கட்சிகள் தனித்தனியாக உண்ணாவிரதம், மனித சங்கிலி என போராட்டம் நடத்தினார்கள். ஆனால் கூட்டணி என்று வந்தவுடன் அனைவரும் இலங்கை பிரச்சினையை மறந்து விட்டனர்.
வெட்கம் இல்லாத கூட்டணி..
காங்கிரசை உண்டு இல்லை என்று பண்ணுவோம் என்று கூறிய கட்சிகளும் காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளன. காங்கிரஸ் கட்சியும் வெட்கம் இல்லாமல் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளது.
இலங்கை தமிழர்களை காக்க கடந்த 53 ஆண்டாக பிரதமருக்கு கடிதம் எழுதுகிறேன், போராட்டம் நடத்துகிறேன், சட்டசபையில் தீர்மானம் போடுகிறேன் என்று கருணாநிதி கூறுகிறார்.
கடைசியில் அறவழி போராட்டமே இலங்கை தமிழர்களை காக்கும் என்று கூறி உள்ளார். இலங்கை தமிழர்களை காப்பாற்ற முடியாமல் மத்திய அரசில் ஏன் பதவி வகிக்க வேண்டும்.
பாகிஸ்தானில் பிரச்சினை ஏற்பட்ட போது பங்களாதேஷில் மனித இனத்திற்கு அழிவு ஏற்பட்ட போது மனிதாபிமான அடிப்படையில் இந்தியா தனது ராணுவத்தை அனுப்பி போர் புரிந்து காப்பாற்றியது. இலங்கையில் என் தமிழ் இனம் அழிகிறது. இங்கிருந்து ராணுவத்தை அனுப்பி தமிழர்களை காப்பாற்ற வேண்டும்.
இலங்கையில் மருத்துவமனை, பள்ளிக்கூடம், கோவில்கள், பல்கலைக்கழகம் என்று சட்டத்தை மீறி குண்டு வீசுகிறார்கள். அவர்களுக்கு தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு கொடுக்கின்றன. இதற்கு காரணம் மக்கள்தான். மக்கள் ஒரு முறை ஓட்டை மாற்றிப்போட வேண்டும்.
எப்படியாவது விஜயகாந்தை பிடித்து ஜெயிலில் போட்டால் தேர்தல் பிரசாரம் செய்ய மாட்டான் என்று நினைக்கிறார்கள். நான் எல்லாவற்றையும் உதறி விட்டு வந்துள்ளேன். கூட்டணி சக்தி பெரிது என்று அவர்கள் நம்புகிறார்கள். மக்கள் சக்தி பெரிது என்று நான் நம்புகிறேன். அதனால் தான் தைரியமாக தனியாக நிற்கிறேன் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications