திருவண்ணாமலையில் தேர்தலுக்கு கறுப்பு கொடி
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அப்பகுதியில் இருக்கும் 10 கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்து கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
திருவண்ணமலை மாவட்டத்தில் செய்யாறை அடுத்த மாங்கல் கூட்டுரோடு அருகே சிப்காட் தொழிற்சாலை ஒன்றை மாநில அரசு அமைக்க இருக்கிறது. தற்போது இதற்கான இடங்களை கையகப்படுத்தும் பணிகள் துரிதகமாக நடந்து வருகிறது.
இதற்கு தேவையான் நிலங்களை அதிகாரிகள் அருகில் இருக்கும் மாத்தூர் அழிஞ்சல்பட்டு, பெரிய பெரும்புலிமேடு, சோழவரம், குண்ணவாக்கம் உள்ளிட்ட 10 கிரமாங்களில் இருந்து கையகப்படுத்தி வருகின்றனர்.
இதையடுத்து விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய பாதுகாப்பு சங்கம் சார்பில் கறுப்பு கொடி மற்றும் பேனர் ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது. இதில் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலையும் புறக்கணிக்க போவதாகவும் இதனால் தேர்தல் அதிகாரிகள் யாரும் இந்த கிராமங்களுக்குள் வர வேண்டாம் என்றும் கூறி அந்த பகுதி முழுவதும் போஸ்டர் அடித்து மக்கள் ஒட்டியுள்ளனர். அத்துடன் தேர்தலை புறக்கணிப்பு செய்வதை வெளிகாட்டும் விதமாக வீட்டின் வாசல்களில் கறுப்பு கொடி ஏற்றியுள்ளனர்.
இது குறித்து செய்யாறு விவசாய நில பாதுகாப்பு சங்க தலைவர் தமிழினியன் கூறுகையில், இந்த 10 கிராமங்களில் சுமார் 17 ஆயிரம் பேர் இருக்கிறோம். வரும் மே 13ம் தேதி செய்யாறு மண்டல வளர்சசி அதிகாரியை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம். நிலங்களை கையகப்படுத்துவதை உடனே நிறுத்த வேண்டும் என்றார் அவர்.