'பொடா' கணேசமூர்த்தி ஈரோடு மதிமுக வேட்பாளர்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள குமாரவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் அ.கணேசமூர்த்தி.
63 வயதாகும் கணேசமூர்த்தி, வைகோவின் தளபதிகளில் ஒருவர்.
திமுகவில் மாவட்டச் செயலாளராக இருந்தார். வைகோ அதிலிருந்து விலகி மதிமுகவைத் தொடங்கியபோது அவருக்கு ஆதரவு தெரிவித்த முதல் திமுக மாவட்டச் செயலாளர் கணேசமூர்த்திதான்.
மதிமுக தொடங்கியது முதலே ஈரோடு மாவட்ட மதிமுக செயலாளராக இருந்து வருகிறார்.
1898ம் ஆண்டு திமுக சார்பில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2 ஆண்டுகளில் சட்டசபை கலைக்கப்பட்டதால் அவரது பதவிக்காலம் பாதியில் முடிந்தது.
பின்னர் 1998ம் ஆண்டு பழனியில், மதிமுக சார்பில் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றார். அதுவும் 13 மாதங்களில் லோக்சபா கலைக்கப்பட்டதால் முடிந்து போனது.
அதன்பின்னர் சில தேர்தல்களில் கணேசமூர்த்தி போட்டியிட்டார். ஆனால் வெற்றி பெறவில்லை.
2002ம் ஆண்டு மதுரை அருகே திருமங்கலத்தில் வைகோ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கூறி அவர் உள்ளிட்டோரை ஜெயலலிதா, பொடா சட்டத்தின் கீழ் கைது செய்து உத்தரவிட்டார். அவர்களில் கணேசமூர்த்தியும் ஒருவர். வைகோவுடன் சேர்ந்து கணேசமூர்த்தி உள்ளிட்டோரும் ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே கணேசமூர்த்திக்காக திமுகவிடம் தொகுதி கேட்டிருந்தார் வைகோ. ஆனால் திமுக தர மறுத்து விட்டது. இதனால் கணேசமூர்த்திக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், அத்தேர்தலில் வைகோவும் போட்டியிடவில்லை.
ஆனால் தற்போது அதிமுக கூட்டணியில், ஈரோடு கண்டிப்பாக வேண்டும் என பிடிவாதமாக இருந்து தொகுதியை வாங்கி கணேசமூர்த்திக்குக் கொடுத்துள்ளார் வைகோ.
தனது தொகுதியில் செய்யும் பிரசாரத்தை விட கணேசமூர்த்திக்காக கூடுதலாக பிரசாரம் செய்வார் வைகோ என்று எதிர்பார்க்கலாம்.