திருவள்ளூர்-பெரம்பலூர் அதிமுக வேட்பாளர்கள் மாற்றம்-ஜெ அதிரடி

வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வேட்பாளர்களின் ஜாதகம், ராசி ஆராயப்பட்ட பின்னர் பெளர்ணமி தினமாகப் பார்த்து 23 தொகுதிகளு்ககும் நேற்று முன்தினம் தான் பட்டியலை வெளியிட்டார் ஜெயலலிதா.
திருவள்ளூர் (தனி) தொகுதிக்கு அந்த மாவட்ட அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவுச் செயலாளர் ராஜனும், பெரம்பலூர் தொகுதிக்கு ஒன்றியச் செயலாளரான மருதை ராஜும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த இருவரையும் தடாலடியாக மாற்றியுள்ளார் ஜெயலலிதா. திருவள்ளூர் தொகுதியில் ஜி.கே. இன்பராஜும், பெரம்பலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.கே. பாலசுப்பிரமணியனும் போட்டியிடுவார்கள் என இன்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதிதாக கிடைத்துள்ள சில தகவல்களின் அடிப்படையில், தவி்ர்க்க முடியாத காரணங்களினால் அதிமுக ஆட்சிமன்றக் குழு மறுபரிசீலனை செய்து திருவள்ளூர், பெரம்பலூர் வேட்பாளர்களை மாற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
பெரம்பலூர் புறநகர் மாவட்டச் செயலாளராக உள்ள பாலசுப்பிரமணியன், ஜெயலலிதா முதன்முறையாக முதல்வரானபோது செய்தித்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
முதன்முதலாக ஜெயலலிதா முதல்வரானபோது மாதமாதம் அமைச்சர்களை மாற்றினார். அந்த வகையில் கே.கே. பாலசுப்பிரமணியனும் சில காலமே அமைச்சராக இருந்தார். இதனால் இவர் ஒரு முன்னாள் அமைச்சர் என்பதே பலருக்குத் தெரியாது.
மருதை ராஜ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுனேயே இவர் மீது ஏராளமான கோல்மால் புகார்கள் இருப்பதாக போயஸ் கார்டனுக்கு பேக்ஸ்கள், மொட்ட கடிதாசிகள் பறந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே இவர் மாற்றப்பட்டதாகத் தெரிகிறது.
ராஜனுக்கு எதிராகவும் இதே போல புகார் மொட்டை கடிதாசிகள் குவிந்ததாகத் தெரிகிறது.
இவர்கள் தவிர மேலும் 4 அதிமுக வேட்பாளர்கள் மீதும் ஏகப்பட்ட புகார்கள் குவிந்துள்ளன. இதனால் இவர்களும் மாற்றப்படலாம்.
கடந்த சில தேர்தல்களிலும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பின்னர் ஜெயலலிதா தூக்கியடித்துள்ளார். இதே நிலை இப்போதும் தொடர்கிறது. இதனால் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து, கட்சியிடம் இருந்து 'பி பார்ம்' பெற்று (கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்பதை உறுதிசெய்யும் சான்றிதழ்) அதை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கும் வரை அவர் தான் வேட்பாளர் என்பது உறுதியில்லை.












Click it and Unblock the Notifications