ஆட்சிக்காக 'கையை' விடாத கருணாநிதி- விஜயகாந்த்
மதுரை: இலங்கை தமிழர் விவகாரத்தில் அனைத்து விஷயங்களை அறிந்துள்ள கருணாநிதி ஈழத்தமிழர்களை காக்க ஆர்வம் காட்டவில்லை. ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்காக அவர் கையை விட தயாரில்லை என விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பை அடுத்து மதுரை தொகுதியில் இருந்த திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் சட்டசபை தொகுதிகள் விருதுநகர் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விருதுநகர் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து திருப்பரங்குன்றம் சட்டசபைக்கு உட்பட்ட ஐராவதநல்லூர், விரகனூர் ஆகிய இடங்களில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். அப்போது மக்களிடம் அவர் பேசுகையில்,
விருதுநகர் தொகுதியில் படித்த, படிக்காத இளைஞர்கள் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு யாரும் வேலைவாய்ப்பு வழங்கவில்லை. காய்கறிகளை சேமித்துவைக்க குளிர்சாதன சேமிப்புக் கிடங்கும், மல்லிகை வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனமும் அமைப்பதாக வாக்குறுதி அளித்தார்கள்.
அதை இன்னும் நிறைவேற்றவில்லை. இந்நிலையில் தற்போது புதிய வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர்.
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கும் இதுவரை தொழிற்பயிற்சி சரியாக அளிக்கப்படவில்லை. மின்சாரம் தடைபடுவதால் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. இதனால் நெசவாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின்தேவையைப் பூர்த்தி செய்ய அதிமுக ஆட்சியில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திமுகவும் அப்பிரச்னையைத் தீர்க்கத் திட்டமிடவில்லை.
இலங்கை ராணுவத்தால் தாக்கப்படும் தமிழக மீனவர்களை காப்பாற்ற மாநில அரசு தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை. இலங்கையில் பிரபாகரனைப் பிடித்தால் நல்லமுறையில் நடத்தவேண்டும் என முதல்வர் கூறுகிறார்.
எனவே அங்கு நடப்பதை முழுமையாகத் தெரிந்திருந்தும் தமிழர்களைக் காக்க அவர் முன்வரவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. கருணாநிதியின் வழிகாட்டலில் செல்வதாக சோனியா காந்தி கூறிய நிலையில், இலங்கைத் தமிழரைக் காக்க திமுக ஆர்வம் காட்டவில்லை.
தோல்வி பயம் வந்துவிட்டது...
இலங்கைப் பிரச்னை, விலைவாசி ஏற்றம் என அனைத்து விஷயங்களிலும் கருணாநிதி மக்களை ஏமாற்றுகிறார். கடந்த மக்களவைத் தொகுதியில் 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம் என பேசிய கருணாநிதியால் தற்போது அப்படிக் கூறமுடியவில்லையே ஏன்? அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.
கோதுமைக்கு விலை கூடுதலாக்க குரல் கொடுத்த தமிழக எம்.பி.க்கள் நெல், கரும்பு விலை கூடுதலாவதற்கு குரல்கொடுக்கவில்லை.
கடந்த 10 ஆண்டுகளாக பாஜக, காங்கிரஸ் என மத்திய அரசில் திமுக இடம்பெற்றாலும் தமிழகத்துக்கு எந்த நன்மையும் இல்லை. டீ உள்ளிட்டவற்றின் விலையேற்றம் பெண்களை அதிகம் பாதித்துள்ளது.
திமுகவினர் கடன் தள்ளுபடி...
விவசாயிகளது கூட்டுறவுக் கடன்களை ரத்துசெய்வதாக கூறி திமுக நிர்வாகிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்துள்ளனர். விவசாயிகளுக்கு உரிய கடன் கிடைக்கவில்லை.
மாற்றுக்கட்சியினர் அடிதடி, வெட்டுக்குத்து என்ற அரசியல் நிலையிலிருந்து மாறி நல்ல அரசியல் சூழல் உருவாக எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டவேண்டும். அதற்காக புதிய ரத்தம், புதிய சிந்தனை என்ற வகையில் எனக்கு ஆதரவளிக்க வேண்டும். நான் வாக்குறுதி தந்துவிட்டால் ஏமாற்ற மாட்டேன். பெண்களையே அதிகம் நம்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications