ராமநாதபுரம் வெற்றியை நிர்ணயிக்கும் முக்குலத்தோர்
ராமநாதபுரம்: தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னரும் ராமநாதபுர தொகுதியின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக முக்குலத்தோர் திகழ்ந்து வருகின்றனர். இதையடுத்து இங்கு அதிமுக, திமுக, பாஜக என அனைத்தும் கட்சிகளும் முக்குலத்தோர்களை வேட்பாளராக தேர்வு செய்துள்ளன.
வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் உள்ள தொகுதிகளை மறுசீரமைக்கும் பணிகளை மேற்கொண்டது. இதையடுத்து முன்னர் இருந்த பல தொகுதிகள் காணாமல் போனது. சில வேறு பெயர்களில் உருமாறியது.
தென் மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றாக கருதப்படும் ராமநாதபுரம் தொகுதியில் தற்போது அந்த மாவட்டத்தை சேர்ந்த பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன.
இதை தவிர்த்து அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அறந்தாங்கி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திருச்சுழி தொகுதிகளும் இதனுடன் சேர்க்கப்பட்டுள்ளன.
வரும் தேர்தலில் இந்த தொகுதியில் இருந்து சுமார் 11 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் ஓட்டுப்போட இருக்கிறார்கள். இவர்களில் முக்குலத்தோர் சுமார் 2.89 லட்சம் பேர். அதாவது இந்த தொகுதியில் 25.57 சதவீதம் பேர் முக்குலத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக முக்குலத்தோர் திகழ்கின்றனர். இங்கு போட்டியிடும் வாக்காளர்கள் பெரும்பாலும் முக்குலத்தோர்களாக இருக்கின்றனர். இதையடுத்து தான் திமுக நடிகர் ஜேகே ரித்திஷ் குமாரை நிறுத்தியுள்ளது. பாஜக வேட்பாளர் திருநாவுக்கரசரும் முக்குலத்தோர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் தொகுதியில் தாழ்த்தப்பட்டவர்கள் 17 சதவீதம், முஸ்லீம்கள் 10.5 சதவீதம், கிறிஸ்துவர்கள் 5 சதவீதம் பேர் உள்ளனர்.
இங்கு அதிகபட்சமாக காங்கிரஸ் 6 முறை வென்றுள்ளது. அதிமுக 3, திமுக 2, தமாகா மற்றும் பார்வர்டு பிளாக் தலா 1 முறையும் வென்றுள்ளன. 1967ல் சுயேச்சையாக போட்டியிட்ட எம்.ஷெரீப் வென்றார்.












Click it and Unblock the Notifications