For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'கோஷ்டி கோட்டா'...காங். வேட்பாளர் தேர்வில் கடும் இழுபறி!

By Staff
Google Oneindia Tamil News

Thangabalu
சென்னை: கோஷ்டிப் பூசல் காரணமாகவும், பழையவர்களை ஒதுக்கிவிட்டு புதியவர்களுக்கு அதிக வாய்பளிக்க வேண்டும் என்ற தலைமையின் நெருக்கடி காரணமாகவும் மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பெரும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வேட்பாளர் தேர்வுக்காக டெல்லியில் முகாமிட்டிருந்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வெறுத்துப் போய் ஊர் திரும்பிவி்ட்டனர்.

இம்முறை புதியவர்கள், இளைய தலைமுறையினருக்கு அதிக வாய்ப்பு தர வேண்டும் என வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் மத்தியக் குழுவிடம் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகன் ராகுல் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

இதையடுத்து தமிழகத்தில் கடந்த முறை வென்ற 10 பேரில் 5 பேரைத் தவிர மற்றவர்களுக்கு வாய்ப்பு தர முடியாது என தலைமை கூறிவிட்டது.

ஆனால், பழையவர்களாக இருந்தாலும் முக்கியத் தலைவர்கள் என்ற வகையில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், இளங்கோவன், மணிசங்கர் அய்யர் ஆகியோர் இடம் பிடித்துவிட்டனர். இவர்களைத் தவிர தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு சீட் உறுதியாகிவிட்டது. புதுச்சேரியில் பழைய முகமான நாராயணசாமிக்கே சீட் என்பதும் உறுதி செய்யப்பட்டுவிட்டது.

ஆனால், காங்கிரஸ் போட்டியிடும் மற்ற இடங்களில், அதாவது சுமார் இன்னும் 9 இடங்களில் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது குறித்து கட்சித் தலைமை யோசித்து வருகிறது.

இதற்கு தமிழக காங்கிரசின் முக்கிய கோஷ்டிகளின் தலைவர்களான வாசன், இளஙகோவன், சிதம்பரம், தங்கபாலுவிடம் எதிர்ப்பு எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு தொகுதி்யிலும் தங்களது நெடுநாள் ஆதரவாளக்களுக்கு சீட் வேண்டும் என்று கோரி தொகுதிக்கு 3 முதல் 5 பேர் வரை கொண்ட பட்டியலை தலைமையிடம் இவர்கள் தந்துள்ளனர்.

இந்தப் பட்டியலுடன் கடந்த 6ம் தேதி முதல் டெல்லியில் முகாமிட்டனர். இதை அடிப்படையாக வைத்து தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத், அமைச்சர் ஆண்டனி ஆகியோர் பட்டியலை இறுதி செய்தனர்.

ஆனால், புதியவர்களுக்கு அதிக இடம் என தலைமை சொல்லிவிட்டதாலும் கோஷ்டிகள் தங்கள் பழைய ஆதரவாளர்களுக்கு சீட் கேட்டு நச்சரித்ததாலும் வேட்பாளர்களை முடிவு செய்ய முடியவில்லை.

இதையடுத்து கடந்த முறை வென்ற 10 இடங்களிலும் அந்ததந்த வேட்பாளரையே நிறுத்திவிட்டு கூடுதலாகக் கிடைத்துள்ள 6 இடங்களிலாவது புதியவர்களைப் போடுமாறு ராகுல் கூறியுள்ளார்.

இதில் யாருடைய ஆதரவாளர்களை வேட்பாளராக அறிவிப்பது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த 6 இடங்களைப் பிடிக்க 4 முக்கிய கோஷ்டிகளும் போட்டா போட்டி போட்டு வருவதால் பட்டியல் தயாரிப்பு தாமதமாகி வருகிறது.

''ஊருலேயே பெரிய மலை நம்ம மலை தான்'' என்பார் திருவிளையாடலில் சிவபெருமானாக வரும் சிவாஜி. அது போல ''ஊருலேயே பெரிய கோஷ்டி நம்ம கோஷ்டி தான்'' என்று கூறி... அதனால் எங்கள் கோஷ்டிக்கே அதிக இடம் ஒதுக்க வேண்டும் என்று 'கோட்டா' அடிப்படையில் சீட் கேட்கின்றனர் தலைவர்கள்.

இந் நிலையில் தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனம் ஆகியோரை சென்னை திரும்ப சொல்லிவி்ட்டது தலைமை. நாங்கள் கூப்பிட்டால் வந்தால் போதும் என அவர்களிடம் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆனால், அமைச்சர்கள் என்பதால் சிதம்பரம், வாசன், இளங்கோவன் ஆகியோர் டெல்லியிலேயே தங்கியிருந்து தங்கள் ஆட்களுக்கு அதிக சீட் பிடிக்க முயன்று வருகின்றனர். கிட்டத்தட்ட பஸ்சில் ஜன்னல் வழியாக துண்டை போட்டு இடம் பிடிப்பார்களே.. அது மாதிரி தான் உள்ளது நிலைமை.

சிக்கல் இப்படியே நீடித்தால் இறுதிக் கட்டமாக சோனியா காந்தியே தலையிட்டு பட்டியலை முடிவு செய்வார் என்கிறார்கள்.

மேலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடும் விருதுநகரை திமுக எடுத்துக் கொண்டு தங்களுக்கு கன்னியாகுமரியைத் தந்தால் குமரியல் நிலவும் அதிருப்தியை நீக்கலாம் என்று திமுகவிடம் காங்கிரஸ் பேசி வருவதாகவும் தெரிகிறது. இதனால் விருதுநகர் தொகுதிக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதா வேண்டாமா என்பதிலும் காங்கிரசுக்கு குழப்பம்.

இதனால் பட்டியல் எப்போது வெளியாகும் என்பது யாருக்குமே தெரியாது. அரை மணி நேரத்திலும் வெளியாகலாம்.. 5 நாளும் ஆகலம் என்பது தான் இப்போதைய நிலை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X