காந்தமால் பாஜக வேட்பாளர் சாகு எஸ்கேப்!
காந்தமால்: ஒரிஸ்ஸா மாநிலம் காந்தமால் தொகுதி பாஜக வேட்பாளர் அசோக் சாகு, போலீஸ் பிடியில் சிக்கியும், அவர்களிடம் கைது வாரண்ட் இல்லாததால் நைசாக தப்பி விட்டார். தற்போது அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சர்ச்சைக்குரிய காந்தமால் தொகுதியில் பாஜக சார்பில் அசோக் சாகு போட்டியிடுகிறார். காந்தமால் தொகுதியில், அவர் பிரசாரம் மேற்கொண்டபோது கிறிஸ்தவர்களைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
ஏற்கனவே மதக் கலவரத்துக்குப் பேர் போன இந்தப் பகுதியில் இவரது பேச்சு பெரும் பீதியைக் கிளப்பியது. இதையடுத்து அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். மேலும் அவரைக் கைது செய்யவும் முடிவு செய்தனர்.
இதையடுத்து சாகு தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில், நேற்று இரவு நயாகார் மாவட்டத்தி்ல அவரை போலீஸார் சுற்றி வளைத்தனர். ஆனால் அவர்களிடம் கைது வாரண்ட் இல்லாததால், கைது செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் இன்று அதிகாலையில், அந்த இடத்திலிருந்து அசோக் சாகு தப்பி விட்டார்.
இதற்கிடையே, தான் போலீஸாரிடம் பிடிபடப் போவதில்லை எனவும் சரண்டர் ஆகவும் மாட்டேன், ஜாமீன் கோரவும் மாட்டேன் என சாகு தெரிவித்துள்ளார். சாகு ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில்தான் சாகு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.