சரத்தும் கைவிட்டார்-11 இடங்களில் பாஜக போட்டி

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் கூட்டணியிலும் பாஜகவுக்கு இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து விஜயகாந்த்துக்கு நூல் விட்டுப் பார்த்தது பாஜக. ஆனால் அவர் சிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து சரத்குமார், கார்த்திக்குடனாவது கூட்டணி அமைக்கலாம் என பாஜக முயன்றது. கார்த்தி்க் என்ன நிலையில் இருக்கிறார் என்று அவருக்கே தெரியாத நிலை.
இருப்பினும் சரத்குமார் மட்டும் பாஜகவை மதித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதாகவும், இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடவுள்ளதாகவும் சரத்குமார் அறிவித்தார்.
தான் நெல்லையிலும், ராதிகா சிவகங்கையிலும் போட்டியிடுவார்கள் எனவும் அவர் அறிவித்தார். இருப்பினும் அதிலும் குழப்பம் ஏற்பட்டது.
இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், தமிழகத்தில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை. ஆனால் கடந்த 10 நாட்களாக அவர்களிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை. தற்போது திசைமாறி, எங்களுக்கு நேர் எதிர்மாறான கொள்கை கொண்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.
நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளுமன்ற மக்கள் கட்சியுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அக்கட்சி போட்டி யிடும் தொகுதிகளை விரைவில் அறிவிக்கும்.
கொங்கு பேரவையும் போய் விட்டது ..
அதேபோல, கொங்கு பேரவையும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வெளியேறிவிட்டார்கள். நாங்கள் தமிழ்நாட்டில் வெற்றி வாய்ப்புள்ள 11 தொகுதிகளில் போட்டியிடுகிறோம்.
போட்டியிடாத இடங்களில் சில கட்சிகள் ஆதரவு கேட்டிருக்கின்றன. கார்த்திக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறோம். மற்ற இடங்களில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்று விரைவில் அறிவிப்போம்.
நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், வடசென்னை, தென் சென்னை, திருச்சி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 11 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கையில் பாஜக போட்டியிடவில்லை. அந்த தொகுதியில் நிற்கும் ப.சிதம்பரம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது ஒட்டு மொத்த நாட்டு மக்களின் விருப்பம். அதற்கு ஏற்ப எங்களுடைய ஆதரவு அமையும்.
உலக நாடுகள் வற்புறுத்தல் காரணமாகவே இலங்கையில் 2 நாள் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு சொல்லிதான் போர் நிறுத்தம் செய்ததாக ப.சிதம்பரம் கூறுகிறார். இந்த அறிக்கை திமுகவுக்கு வேண்டுமானால் திருப்தி அளிக்கலாம். மக்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.
தென்சென்னை பகுதியில் நீங்கள் போட்டியிடுவீர்களா என்று கேட்டதற்கு, இதுகுறித்து கட்சியின் முடிவு இன்று மாலை அறிவிக்கப்படும். 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் கட்சியின் ஆட்சிமன்றக் குழு இன்று மாலை அறிவிக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications