ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: உயிரூட்ட திமுக புது உத்தி!
கடந்த கால திமுக ஆட்சியில், ஜெயலலிதா மீது பல வழக்குகள் தொடரப்பட்டன. அதில் முக்கியமானவை முதல்வர் பதவியைப் பயன்படுத்தி லண்டனில் ஹோட்டல் வாங்கியது தொடர்பான வழக்கு மற்றும் வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து குவித்த வழக்கு.
இந்த இரண்டு வழக்குகளும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி பெங்களூர் தனி கோர்ட்டுக்கு கடந்த 2003ம் ஆண்டு மாற்றப்பட்டன. அன்று முதல் இவை நிலுவையில் உள்ளன.
இந்த இரண்டு வழக்குகளும் முதலில் தனித் தனியான வழக்குகளாகத்தான் இருந்தன. ஆனால் பின்னர் பெங்களூர் தனி கோர்ட் இவை இரண்டையும் ஒன்றாக்கியது.
இதை எதிர்த்து திமுக சார்பில் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2005ம் ஆண்டு இடைக்காலத் தடை விதித்தது.
இந் நிலையில், லண்டன் ஹோட்டல் வழக்குக்குப் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அந்த வழக்கை திரும்பப் பெற விரும்புவதாகவும், அதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், லண்டன் ஹோட்டல் வழக்கில் பெங்களூர் கோர்ட்டில் ஆஜராகியுள்ள அரசின் சிறப்பு நீதிபதி பி.வி. ஆச்சார்யா தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், லண்டன் ஹோட்டல் வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை. எனவே இந்த வழக்கை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.
இதுகுறித்து ஆச்சார்யா மேலும் கூறுகையில், லண்டன் ஹோட்டல் வழக்கு கேஸ் டைரியை ஆய்வு செய்தபோது 2001ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி புதிய விசாரணை அதிகாரி சுப்புராமன், சிறப்பு நீதிபதியின் அனுமதியைப் பெற்று மேல் விசாரணை நடத்தியுள்ளார்.
அப்போது அவர் விசாரணை நடத்திய அமலாக்கப் பிரிவு துணை இயக்குநர் சுப்ரமணியன் என்பவர், லண்டன் ஹோட்டல் வழக்கில், ஜெயலலிதாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளதாக பதிவு செய்துள்ளார் சுப்புராமன்.
லண்டன் ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் சுப்ரமணியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், லண்டனில் ஒரு வேளை ஜெயலலிதா சொத்து வாங்கியிருந்தாலும் (ஹோட்டல்) கூட அதை நிரூபிப்பது மிகவும் கடினமானதாகும்.
எனவே இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவது என்பது மிகவம் சிரமமானதாகும். போதிய ஆதாரங்கள் இல்லாததால் இதை வெற்றிகரமாக நடத்த முடியும் என நான் நினைக்கவில்லை என்று ஆச்சார்யா கூறியுள்ளார்.
எனவே இந்த வழக்கை விலக்கிக் கொள்வது குறித்து முடிவெடுக்க சிறப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும் தற்போது இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே இந்த வழக்கை விலக்கிக் கொள்ள பெங்களூர் சிறப்பு அரசு வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும். இதுதொடர்பாக பெங்களூர் தனி நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உரிய அறிவுறுத்தல்களைப் பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணையை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஒத்திவைத்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தவிர அவரது தோழி சசிகலா, வி.என்.சுதாகரன், டிடிவி தினகரன், இளவரசி ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏன் இந்த திடீர் முடிவு..?:
தமிழக அரசின் இந்த திடீர் நடவடிக்கை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நீண்ட காலமாக பெங்களூர் தனி கோர்ட்டில் கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குக்கு உயிர் கொடுத்து அதை விசாரணைக்குக் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசு குறிப்பாக திமுக விரும்புவதாக தெரிகிறது.
அதற்கு இடைக்கால தடை முட்டுக்கட்டையாக உள்ளது. திமுக அரசைப் பொறுத்தவரை லண்டன் ஹோட்டல் வழக்கை விட சொத்துக் குவிப்பு வழக்குதான் முக்கியமானது. எனவே லண்டன் ஹோட்டல் வழக்கை தூக்கிப் போட்டு விட்டு சொத்துக் குவிப்பு வழக்குக்கு உயிர் கொடுக்கும் வகையிலேயே இந்த திடீர் முடிவை திமுக அரசு எடுத்ததாக தெரிகிறது.
லண்டன் வழக்கை வாபஸ் பெற்று விட்டால், தானாகவே சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.