என் பேச்சால் கதிகலங்கப் போகின்றனர்-கார்த்திக்
தேனி: நான் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை இன்னும் இரண்டு நாட்களில் அறிவிப்பேன் என நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் அறிவித்துள்ளார்.
நாடாளும் மக்கள் கட்சியின் தேனி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தேனியில் நடந்தது. இதில் கட்சி தலைவர் கார்த்திக் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
தேனி தொகுதி வேட்பாளராக மாவட்டச் செயலாளர் ரமேஷை நிறுத்தியுள்ளேன். நான் போட்டியிம் தொகுதி குறித்து இரண்டு நாளில் அறிவிக்க உள்ளேன்.
இலங்கைக்கு அனுப்புங்கள்...
இலங்கை பிரச்சனை பற்றிய பேசிய தமிழக தலைவர் ஒருவர் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்றார். தமிழகத்தில் ஏன் ரத்த ஆறு ஓட வேண்டும். அப்படி பேசுபவர்களின் குடியுரிமையை ரத்து செய்து அவர்களை இலங்கைக்கே அனுப்பிவிட வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளும் கட்சிக்கு தைரியம் இல்லை.
இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் சொத்தில் ஒரு பங்கை எடுத்தாலே இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்திவிடலாம். முக்குலத்தோர் இனத்தின் ஓட்டுக்களை பெறும் கட்சிகள் அந்த இனத்திற்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை. இப்போது உள்ள அரசியல்வாதிகளில் நான் மட்டுமே உண்மையை பேசுகின்றேன்.
என்னை கூட்டணியில் சேர்க்க பல கட்சிகளும் பயப்படுகின்றன. வரும் 17ம் தேதிக்கு பின்பு நான் பேசப்போகும் உண்மைகளால் அரசியல் கட்சிகள் கதிகலங்கப் போகின்றன (இன்னுமா!) என்றார்.