திமுகவுக்கு நெருக்கடி தருவாரா இல.கணேசன்
எதிலுமே நிதானமாக அடியெடுத்து வைப்பவர் இல.கணேசன். ஆர்.எஸ்.எஸ்ஸில் ஆரம்பத்தில் இருந்தவர். அங்கிருந்து பாஜகவுக்கு வந்தவர்.
தஞ்சையில் பிறந்த இல.கணேசன் அரசியலுக்கு வருவதற்கு முன்பு அரசுப் பணியில் இருந்தவர். ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளில் ஈடுபாடு ஏற்படவே அரசுப் பணியைத் துறந்து விட்டு அதில் இணைந்தார்.
பின்னர் படிப்படியாக பாஜகவில் நுழைந்தார். 2002ம் ஆண்டு முதல் 2006 வரை பாஜக தேசிய செயலாளராகப் பணியாற்றினார்.
தேசிய அளவில் சிறப்பாக பணியாற்றிய அவரை தமிழகத்தில் கட்சியை வலுவாக்கும் நோக்கில் மாநிலத் தலைவராக நியமித்தது பாஜக மேலிடம்.
முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா என இரு தலைவர்களிடமும் நெருங்கிப் பழகியவர். மாற்றுக் கட்சியினரிடமும் பண்போடு பழகக் கூடியவர். இனிமையாக பேசக் கூடியவர். தனது பதிவுகளை ஆழமான வார்த்தைளாலும், கருத்துக்களாலும் பதிவு செய்யத் தவறாதவர்.
தென் சென்னையில் திமுகவின் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அதிமுகவின் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரை எதிர்த்து களம் கண்டுள்ளார்.
இருவருமே பெரும் பலத்துடன் விளங்கும் நிலையில், பாஜகவின் வாக்கு வங்கியைக் கொண்டு இக்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என இல.கணேசன் நம்புகிறார்.
திமுக, அதிமுகவுக்கு இல.கணேசன் இடையூறாக இருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.