நண்பரின் மகளை கடத்தியதாக சாமியார் மீது புகார்
கொடைக்கானல்: தன்னிடம் நண்பர் போல் நடித்த சாமியார் ஒருவர் தனது மகளை கடத்தி கொண்டு போய்விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுத்து தனது பெண்ணை மீட்டு தர வேண்டும் எனவும் கொடைக்கானலை சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அசோக்ஜி என்பவர் பழநி தேக்கந்தோட்டத்தில் பாபா ஆசிரமம் என்ற பெயரில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். 46 வயதான அவர் ஏற்கனவே மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்டவர். தற்போது அவர்களை பிரிந்து ஆசிரமத்தில் தனியாக இருந்து வருகிறார்.
இவரை சந்தித்து ஆலோசனை பெற புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி உட்பட பல முக்கிய புள்ளிகளும் வந்து போவதால் இவர் அப்பகுதியில் மிகவும் பிரபலம்.
இவரது நண்பர் கொடைக்கானல் டர்னர்புரத்தை செல்வம். இருவருக்கும் 13 வருட நட்பு. நண்பர் என்ற முறையில் செல்வம் தனது குடும்பத்துடன் அடிக்கடி அசோக்ஜியை ஆசிரமத்தில் சென்று சந்தித்துள்ளார்.
கல்லூரியில் பி.எஸ்சி. முதலாவது ஆண்டு படிக்கும் செல்வத்தின் மூத்த மகள் சுதாவுடன் சாமியார் அசோக்ஜி அடிக்கடி போனில் பேசியுள்ளார். அசோக்ஜிக்கு தனது வயதிருப்பதால் இதை செல்வமும் பெரிதாக நினைக்கவில்லை.
இந்நிலையில் சில நாட்களாக அவர்களது பேச்சில் செல்வத்துக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து செல்வம் தனது மகளின் அறையை சோதனையிட்டார். அதில் சாமியாரின் போட்டோ இருந்துள்ளது. இதனால் ஆத்திரமைடந்த செல்வம் தனது மகளை கண்டித்துள்ளார். இனிமேல் அவருடன் பேசக்கூடாது என கட்டளையிட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 9ம் தேதி சாமியார், சுதாவை காரில் அழைத்து சென்று விட்டதாகக் சொல்லப்படுகிறது. இதையடுத்து ஆசிரமத்துக்கு சென்று மகளை அழைத்து வர முயன்ற செல்வத்தை அங்கிருந்த பணியாட்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. அதை மீறு உள்ளே சென்ற செல்வத்ததை மிரட்டி தாக்கியுள்ளனர்.
இதையடுத்து செல்வம் இரவோடு இரவாக பழநி டவுன் போலீசில் புகார் செய்ய சென்றார். ஆனால், அவர்கள் வழக்கு கொடைக்கானல் எல்லைக்குட்பட்டது. அங்கு சென்று வழக்கு பதிவு செய்யுமாறு கூறியுள்ளார்.
நேற்று காலை செல்வம் கொடைக்கானல் காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தார். புகாரை வாங்கி கொண்ட போலீசார் எப்ஐஆர் போடாமல், பதிவு ரசீது மட்டும் கொடுத்துள்ளனர்.
செல்வம் கூறுகையில், என்னுடன் உறவினர் போல் நன்றாக பழகினார். எனது பெண்ணுக்கு 18 வயதாகும் வரை காத்திருந்து தற்போது அவரை ஏமாற்றி அழைத்து சென்றுள்ளார் என்றார்.