தென்காசியைப் புறக்கணித்த பாஜக - தொண்டர்கள் விரக்தி
தென்காசி: தென்காசி தொகுதியில் பாஜக போட்டியிடவில்லை என்ற தகவல் அத்தொகுதி பாஜகவினரை அதிர்ச்சியிலும், விரக்தியிலும் தள்ளியுள்ளது.
சமத்துவ மக்கள் கட்சியோடு கூட்டணி இல்லை என்று நேற்று பாஜக தலைவர் இல.கணேசன் சென்னையில் தெரிவித்து விட்டார். மேலும், 11 தொகுதிகளில் பாஜக போட்டியிடும் எனவும் அவர் அறிவித்தார்.
ஆனால் இந்தப் பட்டியலில் தென்காசி இடம் பெறாதது அத்தொகுதி பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இங்கு, 1999ம் ஆண்டு சுமார் 900 வாக்குகள் வி்த்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது பாஜக. எனவே இம்முறை பாஜக போட்டியிடும். எப்படியும் சீட் கிடைக்கும் என பாஜகவினர் நம்பிக்கையுடன் இருந்தனர்.
ஆனால் இல.கணேசன் அறிவிப்பால், தொண்டர்கள் அப்செட் ஆகி விட்டனர்.
தென்காசி தொகுதியில் திமுக கூட்டணியில் காங் போட்டியிடுகிறது. அக்கட்சி இன்னும் வேட்பாளரை அறிவிக்காத நிலையில் தேர்தல் பணிகளை செய்யாமல் உள்ளனர்.
அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூ வேட்பாளர் லிங்கம் போட்டியிடுகிறார். அவரும் தேர்தல் பிரசாரத்தை இன்னும் துவக்கவில்லை. லிங்கம் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
தேமுதிக வேட்பாளராக இன்பராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியினர் சட்டசபை தொகுதி வாரியாக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்தி வருகின்றனர்.
தென்காசி தொகுதியில் பாஜகவிற்கு கணிசமான ஓட்டு வங்கி உள்ளது. 1999ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஆறுமுகம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 354 வாக்குகள் பெற்றார். 887 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
1998ம் ஆண்டு பாஜக ஆதரவோடு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முருகேசன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.