சி.ஆர்.பி.எப் பஸ் மீது நக்சலைட்டுகள் தாக்குதல் - 2 வீரர்கள் உள்பட 7 பேர் பலி
லடேகர் (ஜார்க்கண்ட்): தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக சென்று கொண்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது நக்சலைட் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 7 வீரர்கள் பலியானார்கள்.
தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக சி.ஆர்.பி.எப். வீரர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். லடேகர் என்ற இடத்தில் பஸ் வந்தபோது திடீரென நக்சலைட்டுகள் கண்ணி வெடியை வைத்திருக்கலாம் என சந்தேகம் எழு்நதது.
இதையடுத்து பஸ்சை நிறுத்தி வீரர்கள் அனைவரும் இறங்கி நடக்கத் தொடங்கினர். பஸ் முன்னாள் போய்க் கொண்டிருந்தது.
அப்போது தீவிரவாதிகள் திடீரென கண்ணிவெடியை இயக்கினர். இதில் பஸ் வெடித்துச் சிதறியது. பஸ் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து பஸ்சுக்குப் பின்னால் நடந்து வந்த 80 சிஆர்பிஎப் வீரர்களும், மறைந்திருந்த நக்சலைட்டுகளை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர்.
பதிலுக்கு தீவிரவாதிகளும் சுட்டனர். இதில், சி.ஆர்.பி.எப் வீரர் தர்மேந்தர் யாதவ் மற்றும் ஐந்து நக்சலைட்டுகள் உயிரிழந்தனர். 6 நக்சலைட்டுகள் காயமடைந்தனர். அவர்களை தூக்கிக் கொண்டு மற்ற நக்சலைட்டுகள் தப்பி விட்டனர்.
சி.ஆர்.பி.எப் தரப்பில் ஆறு வீரர்கள் காயமடைந்தனர்.