போர் நிறுத்தம் முடிந்தது-அதிகாலை முதல் ராணுவம் வெறித் தாக்குதல்-நூற்றுக்கணக்கில் தமிழர்கள் பலி?

இலங்கை ராணுவத்தின் தாக்குதல் வேகத்தைப் பார்த்தால் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் பலியாகும் அபாயகரமான நிலை நிலவுகிறது.
கடந்த 2 நாட்களாக போர் நிறுத்தம் அமலில் இருந்தபோதும் கூட இலங்கை ராணுவத்தின் தாக்குதல் நிறுத்தப்படவில்லை. மாறாக கடந்த 2 நாட்களில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது போர் நிறுத்தம் முடிந்து விட்டது. போர் நிறுத்தம் முடிவதற்கு முன்பாகவே பாதுகாப்பு வலையப் பகுதியில் பெரும் தாக்குதலை நடத்த படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் பெரும் தாக்குதலை ராணுவம் தொடுத்துள்ளது.
தரைவழித் தாக்குதலுக்கு வசதியாக பெருமளவு ராணுவ வாகனங்களும் ஆயுதங்களும் கடந்த இரண்டு நாட்களாக பாதுகாப்பு வலயப் பகுதிகளை நோக்கி நகர்த்தப்பட்டன.
இரண்டு நாள் தாக்குதல் நிறுத்தம் என்ற அறிவிப்பை இதற்கு வசதியாகவே இலங்கைப் படையினர் பயன்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று அதிகாலை 5 மணி முதல் மாத்தளன் முதல் வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளை நோக்கி எறிகணைத் தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்கள், டாங்கிகளின் தாக்குதல்களுடன் மற்றும் கனரக துப்பாக்கித் தாக்குதல்களையும் இலங்கைப் படையினர் நடத்தி வருகின்றனர்.
படையினரின் எறிகணைகள் மக்கள் வாழும் பகுதிகளில் மிகவும் வீழ்ந்து வருவதால் பொதுமக்கள் தரப்பில் பெரும் உயிரிழப்புக்கள் ஏற்படக்கூடிய பேரபாயம் உருவாகியிருப்பதாக அஞ்சப்படுகிறது.
அதிகாலை முதல் நடந்து வரும் தாக்குதலில் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை தெரியவில்லை.
காலை 5.30 மணியளவில் பாதுகாப்பு பகுதிக்குள் சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்கியது ராணுவம்.
2 மணிநேரம் தொடர்ந்து இடைவிடாது குண்டுகள் வீசப்பட்டன. அதேசமயம் பீரங்கிகளாலும் சரமாரியாக சுட்டனர்.
போர் விமானங்களும் குண்டுகளை வீசின. காலை 7.30 மணியளவில் 16 குண்டுகளை விமானங்கள் வீசின. 7.40 மணியளவில் 3 பகுதிகளில் இருந்து பீரங்கி படைகள் உள்ளே புகுந்து குண்டுகளை வீசின. கடற்படை கப்பல்களும் குண்டுவீசி தாக்கின. இந்த தாக்குதல்கள் 10.40 மணி வரை இடைவிடாது நீடித்தது.
நாலாபுறமும் இருந்து குண்டுகள் வந்து விழுந்ததால் மக்களால் எங்கும் தப்பி செல்ல முடியவில்லை.
ஏற்கனவே அங்கு பெய்து வரும் பலத்த மழையினால் அவர்களின் பதுங்கு குழிக்குள் வெள்ளம் புகுந்து இருந்தது. எனவே பதுங்க இடம் இல்லாமல் வெளிப்பகுதியிலேயே இருந்தனர். குண்டுகள் வந்து விழுந்தபோது தப்பி செல்ல முடியாமல் அதில் சிக்கி உயிரை இழந்தனர்.
காலை 3 மணி நேரம் நடந்த சண்டையில் மட்டுமே 180 பேர் பலியானாதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்களையும் காப்பாற்ற யாராலும் முடியவில்லை. அனைவரும் குத்துயிராக கிடக்கின்றனர்.
பாதுகாப்பு பகுதி மொத்தம் 12 கிலோ மீட்டர் நீளமும் 1 கிலோ மீட்டரில் இருந்து 2 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. மிகக் குறுகிய இந்தப் பகுதியில் 2 லட்சம் பேர் வரை தங்கியிருப்பதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.
இலங்கைப் படைகள் மூர்க்கத்தனமாக தாக்கி வருவதால் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் செத்து மடியும் பேரவலம் ஏற்பட்டுள்ளது.
நிரந்தர போர் நிறுத்தம்-புலிகள் கோரிக்கை நிராகரிப்பு:
இதற்கிடையே நிரந்தர போர் நிறுத்தத்துக்கு விடுதலைப் புலிகள் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசு திட்டவட்டமாக நிராகரித்துவிட்டு இந்தத் தாக்குதலை தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications