Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நக்சல் தாக்குதல்-17 பேர் பலி: வன்முறையுடன் முடிந்தது முதல் கட்ட தேர்தல்

Subscribe to Oneindia Tamil

Voting taking place amid tight security
டெல்லி: ஜார்க்கண்ட், பீகார், சட்டீஸ்கர், ஒரிசா ஆகிய மாநிலங்களில் நக்சலைட்கள் பெரும் தாக்குதல் நடத்தியதில் 17 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் முதல் கட்ட தேர்தல் வன்முறையுடன் முடிந்தது.

124 லோக்சபா தொகுதிகளுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடந்தது. எதிர்பார்த்தது போலவே நக்சலைட்கள் தங்களது கைவரிசையை சற்று பலமாகவே இன்று காட்டி விட்டனர்.

சட்டீஸ்கர், பீகார், ஒரிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் நடந்த பெரும்பாலான தொகுதிகளில் நக்சலைட்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் மொத்தமாக 17 பேர் உயிரிழந்தனர்.

கேரளா, அருணாச்சல் பிரதேசம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றில் தேர்தல் அமைதியாக நடந்தது.

ஜார்க்கண்ட் மாநிலத்திலும், பீகாரிலும் வாக்குப் பதிவு மந்தமாக இருந்தது. இங்கு குறைந்த அளவிலான வாக்குப் பதிவே இருக்கும் எனத் தெரிகிறது.

அதேபோல ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகியவற்றிலும் வாக்குப் பதிவு மந்தமாக காணப்பட்டது.

இரு்பினும் கேரளாவில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக இருந்தது.

சட்டீஸ்கரில் ..

சட்டீஸ்கரில் 11 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. அங்கு ராஜ்நத்கோவன் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி 5 போலீஸார் உயிரிழந்தனர்.

2வது சம்பவமாக, டான்டேவாடா என்ற இடத்தில் உள்ள மரோகி கிராமத்தில், சிஆர்பிஎப் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

தெற்கு பஸ்தார் பிராந்தியத்தில் ஆறு வாக்குச் சாவடிகளில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

பீஜப்பூர் மாவட்டம் ஜகம்பால் கிராமத்தில் நக்சலைட்கள் மிரட்டியதால் தேர்தல் அதிகாரிகள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

தான்டேவாடா பகுதியில், உள்ள தெற்கு பஸ்தாரில் மத்திய ரிசர்வ் போலீஸாரை குறி வைத்து நக்சலைட்டுகள் தாக்கினர்.

அதேபோல சட்டீஸ்கரின் நாராயண்பூர் என்ற இடத்தில் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் வீரர்கள் படுகாயமடைந்தனர்.

நாராயண்பூர் மற்றும் கோதபானூர் ஆகிய இடங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் வெடிகுண்டுகளை வீசி நக்சலைட்கள் தாக்கினர். இதனால் அங்கு வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.

இருப்பினும் தாக்குதல் நடந்த அனைத்து இடங்களிலும் பின்னர் வாக்குப் பதிவு தொடர்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மொத்தம் உள்ள 457 வாக்குச் சாவடிகளில் இரண்டு சாவடிகளில் மட்டுமே பிரச்சினை ஏற்பட்டது. மற்றவற்றில் வாக்குப்பதிவு பிரச்சினை இன்றி நடந்ததாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

ஜார்க்கண்ட்டில்...

ஜார்க்கண்ட் மாநிலத்தில், லடேகர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக சென்ற ஏழு சிஆர்பிஎப் வீரர்களை கண்ணிவெடி வைத்து நக்சலைட்கள் கொன்றனர். பஸ் டிரைவரும், நடத்துனரும் இதில் உயிரிழந்தனர்.

அதேபோல குஹ்தி, பாலமா ஆகிய மாவட்டங்களிலும் நக்சலைட்கள் தாக்குதல் நடத்தினர். அங்கு வாக்குப் பதிவு இதனால் பாதிக்கப்பட்டது.

பீகாரில்...

பீகாரில் கயா மாவட்டத்தில், பாங்கே பசார் என்ற இடத்தில் 12க்கும் மேற்பட்ட நக்சலைட்கள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டதில் ஒரு போலீஸ்காரரும், ஊர்க்காவல் படை வீரரும் உயிரிழந்தனர்.

போலீஸாரைத் தாக்கி அவர்கள் வைத்திருந்த நான்கு துப்பாக்கிகளை பறித்துக் கொண்ட நக்சலைட்கள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களையும் தாக்கி சேதப்படுத்தி விட்டு தப்பினர்.

ஒரிசாவில்..

ஒரிசாவில் மல்கங்கிரி மற்றும் சுந்தர்கர் மாவட்டங்களில் நான்கு வாக்குச் சாவடிகள் சூறையாடப்பட்டன. வாக்குப் பதிவு இயந்திரங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

காந்தமாலில் 3.30மணிக்கே முடிந்த தேர்தல்..

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய காந்தமாலில் கிறிஸ்தவர்கள் பெரும் திரளாக வந்து வாக்களித்ததைக் காண முடிந்தது. நூற்றுக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களித்தனர்.

காந்தமால் வன்முறைக்குப் பின்னர் அங்கிருந்து இடம் பெயர்ந்து சென்றவர்கள் பலரும் வாக்களிப்பதற்காக இன்று தங்களது ஊர்களுக்குத் திரும்பி வந்தனர்.

இதற்கிடையே காந்தமாலில் 3.30 மணிக்கே வாக்குப் பதிவு முடிந்து விட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.

அங்கு 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஸ்ஸாமில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு:

அஸ்ஸாம் மாநிலம் பொகோலா என்ற இடத்தில் வாக்குச் சாவடிக்கு அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தேர்தலை சீர்குலைக்க இதை உல்பா தீவிரவாதிகள் வைத்துள்ளனர். ஆனால் கடைசி நிமிடத்தில் கண்டு பிடிக்கப்பட்டு அது செயலிழக்க செய்யப்பட்டது.

பொகோலா வாக்குச் சாவடி, அதிக பதற்றமான தொகுதியாக அறியப்பட்டுள்ள திபு லோக்சபா தொகுதியின் கீழ் வருகிறது.

வாக்கு எந்திரம் உடைப்பு- 4 சிவசேனா தொண்டர்கள் கைது

இதற்கிடையே, மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி அருகே உள்ள பாபுல்கோவன் கிராமத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களை உடைத்த சிவசேனா கட்சியினர் நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஹிங்கோலி தொகுதியில், மத்திய இணை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சூர்யகாந்தா பாட்டீல் நிற்கிறார். சிவசேனா சார்பில் சுபாஷ் வாங்கடே நிற்கிறார்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் சேதப்படுத்தப்பட்டதால் வாக்குப்பதிவு சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் வேறு எந்திரம் வைக்கப்பட்டு ஓட்டுப் பதிவு தொடர்ந்தது.

முன்னதாக மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான், அவரது மனைவி அமீதாவுடன் வாக்களித்தார்.

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் மகன் ராஜேந்திர ஷெகாவத், மாநில பாஜக தலைவர் நிதின் கத்காரியும் இன்று வாக்களித்தனர்.

ஒரிசாவில் வாக்குப் பதிவு இயந்திரம் எரிப்பு

இதேபோல ஒரிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

அங்குள்ள வாக்குச் சாவடியைத் தாக்கிய அவர்கள் வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பறித்து தீவைத்து எரித்தனர்.

ஆந்த்ராஹில் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. கலிமேலா என்ற இடத்திலும் வாக்குச் சாவடிகளை அவர்கள் தாக்கி சேதப்படுத்தினர்.

அஸ்ஸாம் - 20சதவீத வாக்குப் பதிவு:

அஸ்ஸாம் மாநிலத்தில் வாக்குப்பதிவு தொடங்கிய 2 மணி நேரங்களில் 20 சதவீத அளவுக்கு வாக்குப்பதிவு நடந்துள்ளது.

அஸ்ஸாமில் தீவிரவாத மிரட்டலுக்குப் பயப்படாமல் வாக்காளர்கள் தைரியமாக வாக்களித்து வருகின்றனர். அங்கு வாக்குப்பதிவு தொடங்கி 2 மணி நேரத்தில் 20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்லன.

அஸ்ஸாமில் உள்ள சில்சார், கரீம்கஞ்ச் உள்பட 3 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. 3 தொகுதிகளிலும் 37 பேர்
போட்டியிடுகின்றனர்.

பீகாரில் 10 சதவீத வாக்குப் பதிவு

பீகாரில் மந்தமான வாக்குப் பதிவு நடந்து வருகிறது. வாக்குப் பதிவு தொடங்கிய 3 மணி நேரத்தில் 10 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன.

பீகாரில் மொத்தம் உள்ள 40 லோக்சபா தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடக்கிறது.

பல வாக்குச் சாவடிகளில் மகா மந்தமாக வாக்குப் பதிவு நடந்து வருகிறது.

பீகாரில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடந்து வரும் தொகுதிகள் பலவும் நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பீகாரில் இன்று வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகள் - கயா, ஜெஹான்பாத், அவுரங்காபாத், நவாடா, அரா, பக்ஸார், கராகத், மகாராஞ்கன்ச், சாஸ்ராம், ஜமு, சரன், சிவான், கோபால்கஞ்ச்.

இதில் சரன் தொகுதியில்தான் லாலு பிரசாத் யாதவ் போட்டியடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் கயா, மகாராஜ்கஞ்ச், ஜெஹான்பாத், கராகத், அவுரங்காபாத், ஜமு ஆகிய இடங்களில் நக்சலைட்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

3 மணிக்கே முடிந்த வாக்குப்பதிவு:

நக்சலைட்டுகள் ஆதிகம் உள்ள தொகுதிகளில் மட்டும் 3 மணியளவிலேயே வாக்குப் பதிவு முடிந்து விட்டது. பிற தொகுதிகளில் 5 மணியளவில் வாக்குப் பதிவு முடிவுக்கு வந்தது.

முதல் கட்ட தேர்தலில் 60 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+