திமுக கூட்டணிக்கு தவ்ஹீத் ஜமாத் ஆதரவு
சென்னை: பாஜகவுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதற்காக திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூறியுள்ளது.
இக்கட்சியின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் இதுகுறித்துக் கூறுகையில், முதல்வர் கருணாநிதி முஸ்லிம்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினார். அவருக்கு நன்றி தெரிவிக்க சென்றபோது பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு வழங்குவோம் என்று உறுதி அளித்தோம்.
பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் முஸ்லிம்களுக்கு கூடுதலாக 4.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி எங்கள் கோரிக்கையை முழுவதுமாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் இந்த தேர்தலில் தி.மு.க.வை ஆதரிக்கிறோம்.
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் அறிவித்தது. அதன்படி சச்சார் கமிஷனையும்
நியமித்தது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் சச்சார் கமிஷன், ரங்கநாத்மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகள் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் கூறி உள்ளார். எனவே காங்கிரசை ஆதரிக்கிறோம்.
பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம், பாபர்மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவோம் என்று பேசி வரும் பாசிச பாரதீய ஜனதாவுக்கு பாடம் புகட்டவும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கிறோம்.
அரசியலில் தனி அதிகாரம் பெற வேண்டும் என்ற சிறந்த நோக்கத்துடன் மனித நேய மக்கள் கட்சி களம் இறங்கியது. சுய மரியாதையுடனும், தனித்துவமாகவும் செயல்படும் விதமாக எடுக்கப்பட்ட தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் முயற்சியை கொச்சைப்படுத்தும் விதமாக இரு திராவிட கட்சிகளும் நடந்து கொண்டது வேதனைக்குரியது.
எனவே புதிதாக உருவாகி இருக்கும் சமூக ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளிப்பது எங்கள் கடமை.
அதன்படி மயிலாடுதுறை, ராமநாதபுரம், பொள்ளாச்சி, மத்திய சென்னை, திருச்சி, தென்காசி, தூத்துக்குடி, ஆகிய 7 தொகுதிகளில் மட்டும் சமூக ஜனநாயக முன்னணி வேட்பாளர்களை ஆதரிக்கிறோம் என்றார் பார்க்கர்.