பலத்த பாதுகாப்புடன் கிளிநொச்சி வந்த ராஜபக்சே
ராஜபக்சே தலைமையிலான அரசுக் குழு நேற்று காலை திடீரென கிளிநொச்சிக்கு வந்தது. ராஜபக்சே வருகையயொட்டி மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ராணுவத்தினரை சந்திக்கும் முகமாகவே ராஜபக்சே கிளிநொச்சிக்கு வந்ததாக கூறப்படுகிறது. அவருடன் தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபாயா ராஜபக்சே, ராணுவ தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.
கிளிநொச்சியில் ராணுவத்தினரை சந்தித்த ராஜபக்சே, புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட டாங்குகள், ஆயுதங்களையும் பார்வையிட்டார்.
219 தமிழர்கள் பலி:
இதற்கிடையே, கடந்த 2 நாட்களில் ராணுவம் நடத்திய பெரும் தாக்குதலில் 219 தமிழர்கள் பலியாகியுள்ளனர்.
போர் நிறுத்தம் முடிந்ததைத் தொடர்ந்து மறுபடியும் அப்பாவி மக்களை அழிக்கத் தொடங்கியுள்ளது இலங்கை ராணுவம். பாதுகாப்பு வளையப் பகுதியில் படு தாராளமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
நில மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும், வான் வழியாகவும் பலமுனைகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த 2 நாட்களில் நடந்த தாக்குதலில் 219 தமிழர்கள் பலியாகியுள்ளனர்.
கன ரக பீரங்கிகள் மூலம் தாக்கியதுடன் விமானம் மூலமும் குண்டு வீசினார்கள். நேற்று முன்தினம் முழுவதும், நேற்றும் இந்த தாக்குதல் நீடித்தது.
2 நாள் தாக்குதலில் 219 தமிழர்கள் பலியானார்கள். 408 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக புது மாத்தளன் என்ற இடத்தில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கூட்டம் நிரம்பி வழிகிறது.
எனவே புதிதாக காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை நிலவுகிறது.
புதுக்குடியிருப்புக்கு கிழக்கே மண்கோட்டை போன்ற அரணை உருவாக்கி அங்கிருந்தபடி விடுதலைப்புலிகள் எதிர்த்து போராடி வருகிறார்கள். அங்கு இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடக்கிறது.
நேற்று காலை ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் குண்டு வீசியது.