ஜெ-ராமதாஸ் அணி தான் தவறான கூட்டணி-திருமா
சிதம்பரம்: இலங்கைத் தமிழர் பிரச்னையில் நேர் எதிரான கொள்கையுடைய ஜெயலலிதாவுடன் ராமதாஸ் சேர்ந்ததுதான் தவறான கூட்டணி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
சிதம்பரத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
ஈழத் தமிழர்கள் மீது ராமதாசுக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால் மதிமுகவை அழைத்துக் கொண்டு திமுக அணிக்கு வந்திருக்கலாம். ஆனால் அவர் எடுத்த முடிவு தவறானது.
முரண்பாடான கருத்துடைய காங்கிரஸ் கட்சி கூட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றது. போரை நிறுத்தக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தபோது ஆதரவளித்தது.
ஆனால் இலங்கைப் பிரச்னையில் நேர் எதிரான கொள்கையுடைய ஜெயலலிதாவுடன் பாமக கூட்டணி சேர்ந்தது தவறு. "கொலைக் குற்றவாளி பிரபாகரன் என்றும், அவரைப் பிடித்து இந்தியாவிற்கு கொண்டு வந்து தண்டிக்க வேண்டும்'' என்றும் கூறியவர் ஜெயலலிதா.
இதை ராஜபட்சவும் சோனியா காந்தியும் கூட சொன்னதில்லை. அதிமுகவுடன் 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட கசப்பான அனுபவம், பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியது ஆகிய இரண்டு காரணங்களால்தான் அதிமுகவுடன் நான் கூட்டணி சேரவில்லை.
கடலூர் மாவட்டத்தில் அதிமுகவுக்கு வாக்கு வங்கியே கிடையாது. 1990ல் சிதம்பரம் மக்களவைத் தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டபோது 1 லட்சம் வாக்குகள்தான் பெற்றது. இத்தனைக்கும் இந்தத் தொகுதியில் 3.5 லட்சம் வன்னியர் வாக்குகள் உள்ளன.
அடுத்து 1999, 2004 தேர்தலில் கூட்டணிக் கட்சியான திமுகவின் ஆதரவுடன்தான் பாமக வென்றது. 1999ல் மூப்பனாரால் அறிமுகப்படுத்தப்பட்ட நான், இந்தத் தொகுதியில் இரண்டே கால் லட்சம் வாக்குகள் பெற்றேன்.
2004ல் தனித்துப் போட்டியிட்டு 2.57 லட்சம் வாக்குகள் பெற்று 2ம் இடத்தைப் பிடித்தேன். அப்போது அதிமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு டெபாசிட் இழந்தது.
தற்போது மிகப்பெரிய வாக்கு வங்கியுள்ள திமுக ஆதரவுடன் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications