மயிலாடுதுறையில் ஹாட்ரிக் அடிப்பாரா அய்யர்?
மயிலாடுதுறை தொகுதியில் முதன் முதலில் 1991ம் ஆண்டு வெற்றி பெற்றார் அய்யர். ஆனால் 1996 மற்றும் 98 ஆகிய ஆண்டுகளில் தமாகாவிடம் தோல்வியைச் சந்தித்தார்.
இருப்பினும் 1998 மற்றும் 2004ம் ஆண்டுகளில் இங்கு மீண்டும் வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டார்.
கடந்த முறை போட்டியிட்டபோது அதிமுக வேட்பாளர் ஓ.எஸ். மணியன், அய்யருக்கு கடும் போட்டியைக் கொடுத்தார்.
மணிசங்கர அய்யரின் தந்தை பெயர் சங்கர அய்யர். தாயார் பெயர் பாக்கியலட்சுமி சங்கர அய்யர்.
தற்போது பாகிஸ்தானில் உள்ள லாகூரில், 1941ம் ஆண்டு பிறந்தார் அய்யர். 73ம் ஆண்டு திருமணமானது. மனைவி பெயர் சுனீத் மணி அய்யர். 3 மகள்கள் உள்ளனர்.
பி.ஏ ஹானர்ஸ், எம்.ஏ பொருளாதாரம் படித்தவர். டேராடூனில் உள்ள பிரபல டூன் ஸ்கூல், டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்தவர்.
தொழில்முறை எழுத்தாளர், அரசியல்வாதி, சமூக சேவகர், தொழிற்சங்கவாதி என பலமுகம் உள்ளது அய்யருக்கு.
2004ம் ஆண்டு மே 23ம் தேதி முதல் 2006 ஜனவரி 28 வரை பெட்ரோலியம், பஞ்சாயத்து ராஜ், இயற்கை எரிவாயுத்துறை அமைச்சராக இருந்தார்.
2006 ஜனவரி 29ம் தேதி முதல் பஞ்சாயத்து ராஜ், இளைஞர் நலம், விளையாட்டுத்துறை, வட கிழக்கு பிராந்திய வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார்.
2008ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி முதல் பஞ்சாயத்து ராஜ், வட கிழக்கு பிராந்திய வளர்ச்சித் துறை அமைச்சராக மட்டும் இருக்கிறார். ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
தமிழில் சரளமாக பேச முடியாத சில தமிழ் அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர். நிறையப் படித்தவர். சோனியா காந்தியின் நட்பு வட்டாரத்திற்குள் இருப்பவர். அடிமட்டத் தொண்டர்கள் அளவில் செல்வாக்கு இல்லாதவர். இருப்பினும் எப்படியாவது ஜெயித்து விடுபவர்.
மணிசங்கர அய்யருக்கும், மணியனுக்கும் நடக்கப் போகும் இந்த மோதல் கடந்த முறையை விட அனல் பறக்கும் வகையில் இருக்கும் என நம்பலாம்.