தேர்தல்-'மிகத் தெளிவாக' பேசும் டி.ராஜேந்தர்
சென்னை: சரத்குமார், கார்த்தி்க் கட்சிகள் மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டதாகவும் இதனால் 5 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
ஆனால், இன்று எனது நிலையை கூறிவிட்டேன் நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் அவர் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
கூட்டணி குறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக், புதிய தமிழக கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் மனித நேய மக்கள் கட்சியை சார்ந்தவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை.
சரத்குமார், கார்த்திக் ஆகியோர் பாஜகவோடு சேர்ந்து பயணம் செய்ய இருக்கிறார்கள். அதே போல மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை வேறொரு கூட்டணி அமைத்து அவர்கள் தங்கள் பாதையில் பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
எனவே நாங்கள் எங்கள் பாதையில் பயணத்தை தொடங்க இருக்கிறோம்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிகபட்சம் 8 தொகுதிகளில் அல்லது குறைந்தபட்சம் 5 தொகுதிகளிலாவது போட்டியிட இருக்கிறோம்.
கள்ளக்குறிச்சி, திருச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பூர் மற்றும் சில தொகுதிகளில் போட்டியிடுவோர் பட்டியல் தயாராகிக் கொண்டிருக்கிறது. இன்னும் 2 நாட்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவேன். திருச்சியில் மன்சூர் அலிகான் போட்டியிடுவார் என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன்.
தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து பரிசீலனை செய்து வருகிறேன். நான் போட்டியிடவும் வாய்ப்புண்டு.
லட்சிய திமுக தனித்து போட்டியிடும் என்று இன்று எனது நிலையை கூறிவிட்டேன் நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் யாருக்கு ஆதரவு என்பதை பின்னர் அறிவிப்பேன்.
வரும் சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி 100க்கு மேற்பட்ட இடங்களில் போட்டியிடும் என்றார்.