திமுக ஆட்சி நீடித்தால் தமிழகம் 'பிகார்' ஆகும்-ராமதாஸ்
சென்னை: தமிழகத்தில் இன்னும் 2 ஆண்டு காலம் திமுக ஆட்சியை நீடிக்கவிட்டால் தமிழ்நாடும், 'பிகார் போன்ற' மாநிலமாக மாறிவிடும் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சென்னை தீவுத்திடலில் நேற்று மாலை நடந்த அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர்,
40 தொகுதியிலேயும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று சொன்னேன். இன்றைக்கும் சொல்கிறேன், தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணும் போது 40 தொகுதிகளிலேயும் இந்தக் கூட்டணி வெற்றி பெறும்.
இன்று தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மக்கள் சக்தி, அன்பு சகோதரி பக்கமே இருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது. திமுக தலைமையிலான கூட்டணிக்கு எதிரான அலை இப்போது வீசத் தொடங்கி இருக்கிறது. அது பெரும் புயலாக வீசப் போகிறது.
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. முன்பெல்லாம் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுக்கு உத்தரப் பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களை உதாரணம் கூறுவார்கள்.
ஆனால், இன்னும் 2 ஆண்டு காலம் தமிழகத்தில் இந்த திமுக ஆட்சியை நீடிக்கவிட்டால் தமிழ்நாடும், பிகார் போன்ற மாநிலமாக மாறிவிடும்.
40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். அப்போது கூட்டணியில் அங்கம்பெறுகின்ற நாங்கள் அனைவரும் இலங்கை பிரச்சினையை தலையாய பிரச்சனையாக எடுத்துக்கொண்டு, இலங்கையில் தினம் தினம் செத்து மடிகின்ற தமிழர்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்வோம் என்றார்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில்,
இனிமேல் இந்தியாவில் ஒரு கட்சி ஆட்சி என்பதே வராது. இனிமேல் இந்தியாவில் எந்த கட்சியும் ஏகபோகம் கொண்டாட முடியாது.
மாநிலக் கட்சிகள் இந்தியாவின் அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்கும் கட்டம் வந்துவிட்டது. அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதை அதிமுக தீர்மானிக்கும்.
காவிரி நதி நீர் பிரச்சனையானாலும் சரி, பாலாறு பிரச்சனையானாலும் சரி. முல்லை பெரியார் பிரச்சனையானாலும் சரி, அனைத்திலும் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது.
இலங்கையில் தமிழர்கள் தினந்தோறும் கொன்று குவிப்பதற்கு யார் காரணம்?. நேற்றும் நேற்று முன் தினமும் போர் நிறுத்தம் என்று ராஜபக்சே மக்களை ஏமாற்றினார். இலங்கையில் உள்ள தமிழர்களை கொல்லும்படி ஆயுதம் கொடுத்தது இந்திய அரசு, வட்டியில்லா கடன் கொடுத்தது இந்திய அரசு.
இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று அதிமுக ஆட்சியில் சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்தத் தீர்மானத்தை மத்திய அரசு குப்பை தொட்டியில் தூக்கி வீசிவிட்டது. இந்த நிமிடம் வரை மத்திய அரசு இலங்கை அரசிடம் போர் நிறுத்தம் செய்யும்படி சொல்லவே இல்லை.
திருமங்கலம் இடைதேர்தல் போல் ஒரு ஓட்டுக்கு 2 ஆயிரம், 4 ஆயிரம் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள் இது நடக்காது. அவர்கள் கொடுக்க நினைப்பது பணம், விழுவது தமிழர்களின் பிணம்.
பணமா, அல்லது தமிழர்களின் பிணமா என்பதை தீர்மானிக்க வேண்டியது தமிழக மக்கள். திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு தொகுதியில் கூட டெப்பாசிட் கிடைக்க கூடாது.
காங்கிரஸ் இனி ஒருபோதும் மத்தியில் ஆட்சிக்கு வரப்போவதில்லை. இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்யலாம் என்ற எண்ணம் இனி எவருக்கும் வரக்கூடாது. அந்த அளவுக்கு பாடம் புகட்டுங்கள். அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார் வைகோ.
முன்னதாக, கேட்ட தொகுதிகள் தரப்படாததால் கூட்டணியில் அதிருப்தியிலேயே இருக்கும் வைகோ இந்தக் கூட்டத்துக்கு வருவாரா என்பதே சந்தேகமாக இருந்தது.
வைகோவுடன் அன்புமணி சந்திப்பு:
இந் நிலையில் வைகோவை பாமக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியும் பாமக தலைவர் ஜி.கே.மணியும் சந்தித்துப் பேசினர். ஆனாலும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பே என அன்புமணி கூறினார்.