இந்தியர்கள் கறுப்புப் பணம்:100 நாளில் மீட்பேன்-அத்வானி
மும்பை: பாஜக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் சுவி்ஸ் வங்கிகள் உள்பட வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் மீட்கப்படும் என்று அக் கட்சியின் பிரதமர் வேட்பாளரான அத்வானி கூறியுள்ளார்.
கறுப்புப் பணத்தை மீட்பதற்காக பாஜக ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. அதன் இடைக்கால அறிக்கையை அத்வானி வெளியிட்டு நிருபர்களிடம் பேசுகையில்,
பாஜக இதுவரை சொன்னதை எல்லாம் செய்துள்ளது. இந்தியாவை அணு ஆயுத நாடாக மாற்றுவோம் என்று கூறினோம். அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பையும் மீறி 1998ம் ஆண்டு அணுகுண்டு சோதனை நடத்தி அணு ஆயுத நாடாக மாற்றினோம்.
கறுப்பு பணம் நமது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. கறுப்பு பணம்தான் பயங்கரவாதச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ. 25 லட்சம் கோடியிலிருந்து ரூ. 70 லட்சம் கோடி வரை இருக்கும் என்று எங்களது சிறப்புக் குழு மதிப்பீடு செய்துள்ளது என்றார்.
ஆட்சியில் இருந்தபோதே இந்த கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டு வர நீங்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேட்டதற்கு,
கறுப்புப் பணத்தை மீட்க எங்கள் அரசு திட்டமிட்டது. ஆனால் அப்போது நிலைமை வேறுவிதமாக இருந்தது. வெளிநாட்டில் இருந்து கறுப்புப் பணத்தை மீட்க வேண்டுமானால் மேற்கத்திய நாடுகளின் ஆதரவு தேவை. மேற்கத்திய நாடுகளின் ஆதரவு இல்லாமல் அதை செய்ய முடியாது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடி காரணமாக மேற்கத்திய நாடுகளும் கறுப்புப் பணத்தை கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. எனவே இந்த நேரத்தில் இந்தியாவும் கறுப்புப் பணத்தை கொண்டு வர முயற்சி எடுத்தால் பலன் கிடைக்கும் என்றார்.
கேட்டால் விவரம் தருவோம...சுவிட்சர்லாந்து தூதர்:
இந் நிலையில் டெல்லியில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டுத் தூதர் பிலிப் வெல்டியிடம் இந்த விவகாரம் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு,
இந்தியாவை சேர்ந்தவர்களின் கறுப்பு பணத்தின் விவரங்களை கேட்டு கோரிக்கை எதுவும் எங்கள் நாட்டுக்கு இதுவரை வரவில்லை. அப்படி கோரிக்கை வந்தால் அதுபற்றி பரிசீலித்து, சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
எங்கள் நாட்டின் சட்ட விதிகளின்படி பணத்தை முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களிடம், அந்த பணம் வந்ததற்கான ஆதாரங்களை கேட்டு பெறுகிறோம்.
கிரிமினல் குற்றவாளிகளை பாதுகாப்பது எங்கள் நோக்கம் அல்ல. கெளரவமான வாடிக்கையாளர்களின் சட்டபூர்வ உரிமைகளின் அடிப்படையில், பணம் தொடர்பான ரகசியங்களை பாதுகாத்து வருகிறோம். அதே நேரத்தில், தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நாட்டின் அரசு வங்கிகளிடம் விவரங்களை கேட்டுப் பெறலாம்.
மற்றபடி கறுப்புப் பணம் குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் அத்வானி பேசி வருவது குறித்து நான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.