பணத்தை கொட்டினாலும் திமுக வெல்ல முடியாது-பாமக
சென்னை: பண பலத்தால் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று நினைக்கிறார்கள். கண்டெய்னர், கண்டெய்னராக பணத்தை கொண்டு வந்தாலும், விமானத்திலேயே பணத்தை கொண்டு வந்து கொட்டினாலும் தி.மு.க. அணி வெற்றி பெற முடியாது என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
சென்னை அருகே உள்ள பல்லாவரத்தில் ஸ்ரீபெரும்புதூர் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி, தென் சென்னை அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடந்தது.
இவர்களை டாக்டர் ராமதாஸ் அறிமுகப்படுத்தி வைத்து பேசினார். அவரது இருக்கைக்கு முன்பு ஒரு தாம்பாளம் நிறைய மாம்பழங்கள் (பாமக சின்னம்) அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
டாக்டர் ராமதாஸ் பேசுகையில், அ.தி.மு.க. கூட்டணி வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெறும். நாளுக்கு நாள் அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது.
மக்கள் சக்தி ஜெயலலிதாவுக்கு பின்னால் உள்ளது. இத்துடன் பா.ம.க., ம.தி.மு.க., இடது சாரி கட்சிகளும் இணைந்து இருப்பதால் அமோக வெற்றி பெறுவோம்.
பண பலத்தால் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று நினைக்கிறார்கள். கண்டெய்னர், கண்டெய்னராக பணத்தை கொண்டு வந்தாலும், விமானத்திலேயே பணத்தை கொண்டு வந்து கொட்டினாலும் தி.மு.க. அணி வெற்றி பெற முடியாது.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள், பெண்கள், குழந்தைகள் ஈவு இரக்கம் இல்லாமல் கொல்லப்படுவதை தடுக்க தவறிய தி.மு.க.வின் செயல்பாடுகளை பொதுமக்களிடம் எடுத்து சொல்லி பிரசாரம் செய்யுங்கள்.
சென்னையில் 3 தொகுதிகளிலும் பா.ம.க. போட்டியிடுவதாக நினைத்து பணியாற்றுங்கள். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி பெற ஓய்வில்லாமல் உழைக்க வேண்டும்.
ஸ்ரீபெரும்புதூரில் ஏ.கே. மூர்த்திக்கு மாம்பழம் சின்னத்திலும், தென்சென்னையில் சிட்லப்பாக்கம் ராஜேந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றார் ராமதாஸ்.
நிகழ்ச்சியில், அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி, பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி, ம.தி.மு.க. துணை பொது செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.