ராமதாசுக்கு விரைவில் 'சன்னியாசம்'-பொன்முடி சாபம்
விழுப்புரம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை தமிழக மக்கள் விரைவில் சன்னியாசம் அனுப்பி வைப்பார்கள் என்று தமிழக அமைச்சர் பொன்முடி சாபமி்ட்டுள்ளார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம் வளவனூரில் நடைபெற்றது.
இதில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,
பாமகவினர் கடந்த பத்து மாதத்திற்கு முன்பே அதிமுக கூட்டணியில் சேர முடிவு செய்து விட்டார்கள். இந்த விஷயம் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு சென்ற விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கும் எம்எல்ஏ ரவிக்குமாருக்கும் தெரியவந்தது.
தாங்கள் செல்லும் கூட்டணிக்கு அவர்களையும் சேர்த்து அழைத்து செல்ல நினைத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. ஆரம்ப காலத்தில் ஈழத் தமிழர்கள் பிரச்சனைக்காக முதல் குரல் கொடுத்தவர் கருணாநிதி.
85 வயதான காலத்திலும், சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்து வருபவர் கருணாநிதி. அவரைப் பார்த்து சன்னியாசம் போ என்று சிலர் (ராமதாஸ்) கூறுகிறார்கள்.
கூடிய விரைவில் தமிழகத்தில் மக்கள் உங்களை சன்னியாசம் அனுப்பி வைப்பார்கள் என்பதை மறக்க வேண்டாம்.
நம் தொகுதியில் போட்டியிடும் நீதியரசரை தமிழக்திலே, ஏன், இந்தியாவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications