வன்னியில் தொடரும் ராணுவ தாக்குதல் - 2 நாட்களில் 350 பேர் படுகொலை
வன்னி: வன்னி பாதுகாப்பு வளையப் பகுதியில் தொடர்ந்து ராணுவம் கொலை வெறித் தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று 169 பேரும், இன்று காலை முதல் இதுவரை 178 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பு வலயம் மீது சிறிலங்கா படையினர் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை நடத்திய வெறித் தாக்குதல்களில் 178-க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 344-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
கொத்துக் குண்டுகளை வீசிக் கொலை ..
முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் மீது சிறிலங்கா படையினர் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் கொத்துக்குண்டு, ஆர்ட்டில்லரி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி மற்றும் கனரக துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினர்.
இன்று காலை 6 மணிவரை படையினர் நடத்திய தாக்குதல்களில் 178-க்கும் அதிகமான அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 344-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
மக்கள் வாழ்விடங்கள் மீது தொடர்ந்து ராணுவம் வெறித்தனமாக தாக்கி வருவதாக கூறப்படுகிறது.
நேற்று 169 தமிழர்கள் பலி
புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில் 169 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 234 பேர் காயமடைந்தனர்.
சனிக்கிழமை காலை முதல் மாலை வரை இடைவிடாமல் தாக்குதல் நடந்துள்ளது.
வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, மாத்தளன் மற்றும் இடைக்காடு ஆகிய பகுதிகள் மீது படையினர் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்னர்.
காயமடைந்தவர்கள் மாத்தளன் மருத்துமனைக்கு கொண்டுசெல்ல முடியாதவாறு மருத்துவமனை வீதியில் தொடர்ச்சியாக எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன.
கடும் சிரமத்தின் மத்தியில் காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு பொதுமருத்துவமனை சிகிச்சை நிலையத்திலும் நட்டாங்கண்டல் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெருமளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் கொத்து வெடிகுண்டுகளை இலங்கைப் படைகள் அதிக அளவில் பயன்படுத்தி வருவதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.