நேற்று 19 பேர் வேட்பு மனு தாக்கல் - 2 நாட்களில் 52 பேர் மனு தாக்கல்
சென்னை: வேட்பு மனு தாக்கலின் 2ம் நாளான நேற்று 19 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுயேச்சைகள் ஆவர்.
கடந்த 2 நாட்களில் மட்டும் இதுவரை 52 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் தமிழகம் மற்றும் புதுவையில் தொடங்கியது. இதில் தமிழகத்தில் முதல் நாளில் 33 பேர் மனு தாக்கல் செய்தனர். இவர்களில் யாரும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இல்லை.
நேற்றும், நேற்று முன்தினம் அஷ்டமி, நவமி என்பதால் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யவில்லை. திமுக வேட்பாளர்கள் கூட மனு தாக்கல் செய்யவில்லை.
முதல் நாளில் ஏராளமான சுயேச்சைகள் உள்பட 33 பேர் மனு தாக்கல் செய்தனர்.
நேற்று 19 பேர் மனு தாக்கல் செய்தனர். சென்னையில் உள்ள 3 தொகுதிகளுக்கும் மொத்தம் 7 பேர் மனு தாக்கல் செய்தனர்.
ராமநாதபுரத்தில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லா கான் மனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக சாதிக் பாட்சா மனு தாக்கல் செய்தார்.
இவர்கள் தவிர திருவண்ணாமலை, கரூர், திருச்சி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, சிதம்பரம், மயிலாடுதுறை, தேனி தொகுதிகளிலும் மனுத்தாக்கல் நடந்தது. மொத்தம் 19 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இன்று விடுமுறையாகும்.
நாளை முதல் மனு தாக்கல் சூடு பிடிக்கும். நாளை சுப முகூர்த்த நாள். சித்தயோகத்துடன் கூடிய நாள். எனவே அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் மனுத்தாக்கல் செய்கின்றனர்.
24ம் தேதியான கடைசி நாளன்று மு.க.அழகிரி மனு தாக்கல் செய்கிறார்.