ஓட்டுப் போடாதீர்கள் - வாக்காளர்களிடம் அத்வானி பேரவை பிரசாரம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மக்களை சந்திக்கும் அத்வானி பேரவையினர் ஓட்டுப் போடாதீர்கள் என்று எதிர்மறைப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் குஷியாக இருந்த புதுக்கோட்டை அரசியல் பிரமுகர்கள், தற்போது தொகுதி பறி போன துயரத்தில் சோகமாக உள்ளனர்.
புதுக்கோட்டை தொகுதியை மீட்க திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும், பொது நல அமைபினரும் பல்வேறு கட்ட போராட்டங்களை செய்தும் பலன் இல்லை.
இந்த நிலையில், புதுக்கோட்டையில் உள்ள அத்வானி பேரவையைச் சேர்ந்தவர்கள் தொகுதி முழுவதும் சென்று பொது மக்களைப் பார்த்து மத்திய அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்றால் 49 (ஓ) என்ற சட்டப்பிரிவை பயன்படுத்தி வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்யுங்கள். அப்போது தான் நமக்கு மீண்டும் தொகுதி கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதை அறிந்த முக்கிய அரசியல் கட்சியினர் இது என்னடா புது தலைவலி என்று எரிச்சலாகியுள்ளனராம்.