ஒரே மேடையில் திமுக, சிபிஐ, பாஜக, தேமுதிக வேட்பாளர்கள் பிரசாரம்
சென்னை: வட சென்னை தொகுதியில் போட்டியிடும் தா.பாண்டியன், டி.கே.எஸ். இளங்கோவன், தமிழிசை செளந்தரராஜன் மற்றும் தேமுதிக வேட்பாளர் யுவராஜ் ஆகியோர் ஒரே மேடையில் பிரசாரம் செய்யவுள்ளனர்.
வெளிநாடுகளில் எதிரும் புதிருமாக போட்டியிடுபவர்களை ஒரே மேடையில் ஏற்றி வாதம் புரிய வைத்து அவர்களில் யார் சிறந்த முறையில் செயல்படுவார்கள் என்ற கணிப்பை மக்களே நிர்ணயிக்கும் அருமையான முறை அமலில் உள்ளது.
ஆனால் நமது நாட்டில் அப்படி ஒரு நிகழ்வை கனவில்தான் காண முடியும்.
இந்த நிலையில்,சமீப காலமாக பெரிய தலைவர்களை ஒரே மேடையில் ஏற்ற முடியாவிட்டாலும் கூட தேர்தல் நேரங்களில் வேட்பாளர்களை ஒரே மேடையில் ஏற்றி பேச வைக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில், வட சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக, சிபிஐ, பாஜக, தேமுதிக வேட்பாளர்களை ஒரே மேடையில் ஏற்றி பேச வைக்கப் போகிறார்கள்.
வடசென்னை தொகுதி மக்கள் உரிமை கூட்டமைப்பு இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
வருகிற 24-ம் தேதி சுங்கச்சாவடி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் தா.பாண்டியன், தி.மு.க. வேட்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், பா.ஜ.க. வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தே.மு. தி.க. வேட்பாளர் யுவராஜ் ஆகியோர் இதில் கலந்து கொள்கிறார்கள்.
இது பற்றி மக்கள் உரிமை கூட்டமைப்பு நிர்வாகி போஸ் கூறுகையில், 4 கட்சி வேட்பாளர்களும் கலந்து கொள்ள சம்மதித்துள்ளார்கள். மேடையில் விவாதம் கிடையாது. ஒவ்வொரு வேட்பாளரும் தொகுதி பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள், வெற்றி பெற்றால் செய்யப்போவது என்ன? என்பது பற்றி தொகுதி மக்களுக்கு விளக்கி கூறுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications