12000 ஊழியர்களை நீக்க சத்யம் புதிய நிர்வாகம் முடிவு
ஹைதராபாத்: இரண்டு நாட்கள் சந்தோஷம் என்றால், நான்கு நாட்கள் துக்கம் அனுஷ்டிக்க வேண்டிய நிலையில் உள்ளனர் சத்யம் நிறுவன ஊழியர்கள்.
சத்யம் நிறுவனத்தின் புதிய உரிமையாளராக டெக் மஹிந்திரா வந்தவுடன் எல்லோரும் சந்தோஷப்பட்டனர். அதே நேரம் எப்போது வேலை நீக்க உத்தரவுகள் வருமோ என்ற சின்ன பயமும் உள்ளுக்குள் இருந்து வந்தது.
இப்போது அவர்கள் பயம் நிஜமாகும் அறிகுறி தெரிய ஆரம்பித்துள்ளது.
இன்னும் ஒரு மாத காலத்துக்குள் சிக்கன நடவடிக்கையாக பணியாளர்களைக் குறைக்கப் போவதாக சத்யம் நிறுவன சிஇஓ ஏஎஸ் மூர்த்தி அறிவித்துள்ளார்.
சத்யம் நிறுவனத்தில் 48000 ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 80 சதவிகிதம் சத்யம் கிளைகளிலும், 20 சதவிகிதம் ஆன் சைட் ஊழியர்களாகவும் உள்ளனர்.
இவர்களில் மொத்தம் 12 ஆயிரம் பணியாளர்களை நீக்க உத்தேசித்துள்ளது டெக் மஹிந்திரா. முக்கிய வாடிக்கையாளர்களை கவனிக்கும் பணியாளர்களை மட்டும் தொந்தரவு செய்யாமல் விட்டுவிடலாம் என முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல இனி அனைத்துப் பணிகளையும் டெக் மஹிந்திரா பெயரில் செய்வதா அல்லது பழைய சத்யம் பெயரிலேயே தொடர்வதா என்பது குறித்தும் இந்த வாரம் முடிவு செய்யப் போவதாக டெக் மஹிந்திரா தலைவர் ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார். விரைவில் சத்யம் நிறுவனத்துக்கு புதிய சிஎப்ஓ வை நியமிக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications