தலைமை செயலக கட்டிட பணி-முதல்வர் ஆய்வு
சென்னை: புதிய தலைமை செயலகத்தின் கட்டுமான பணிகளை முதல்வர் கருணாநிதி இன்று பார்வையிட்டு, பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் பணிகள் விறுவிறுவென நடந்து வருகிறது. சுமார் 86 ஆயிரத்து 458 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.426 கோடி செலவில் கட்டப்படும் இந்த கட்டிடம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது.
இதற்கான பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கியது. வரும் நவம்பர் மாதத்துக்குள் முழு கட்டிடத்தை கட்டி முடிக்கவும், மீதமுள்ள இறுதி கட்டப்பணிகளை 2010ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்பின்னர் புதிய சட்டசபை அரசிடம் ஒப்படைக்கப்படும். இந்த புதிய கட்டிடத்தில் 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி கட்டிட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு இது குறித்து ஆலோசனை வழங்கினார்.
அப்போது அவருடன் உள்துறை முதன்மை செயலாளர் மாலதி, நிதித்துறை முதன்மை செயலாளர் ஞானதேசிகன், சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications