’நடுத்தர வர்க்கத்தினரே, ஓட்டு போடுங்கள்’..பாஜக
சென்னை: லோக்சபா தேர்தலில் நடுத்தர வர்க்கத்தினர் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற அவர்கள் முழுமையாக முன்வர வேண்டும் என பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இல.கணேசன் கூறுகையில், தென் சென்னையில் உள்ள வாக்காளர்களில் படித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 40 சதவீதம் பேர் பெரும்பாலும் வாக்களிப்பதில்லை. தங்களது ஜனநாயக பொறுப்பை அவர்கள் உணர வேண்டும். கண்டிப்பாக வாக்களிக்க முன்வர வேண்டும்.
மத்தியில் ஆட்சி அமைப்போம் என்று கூறி பகிரங்கமாக வாக்கு கேட்பது பாஜக மட்டுமே. தமிழக வாக்காளர்கள் பெரும்பாலும் சட்டசபைக்கு ஒரு மாதிரியாகவும், லோக்சபாவுக்கு வேறு மாதிரியாகவும் வாக்களிப்பது வழக்கம்.
வாக்களிப்பதற்கு முன்பு பாஜகவின் கொள்கைகள் குறித்தும், அதன் பிரதமர் வேட்பாளர் அத்வானி குறித்தும் மனதில் கொண்டு வாக்காளர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க முன்வர வேண்டும்.
எங்களுக்கு வெற்றி உறுதி என்று தெரிந்த தொகுதிகளில் மட்டுமே நாங்கள் போட்டியிடுகிறோம். உண்மை நிலவரத்தைப் புரிந்து கொண்டுதான் போட்டியிடுகிறோம்.
தேர்தல் பிரசாரத்தின்போது விலைவாசி உயர்வு, மின்சாரப் பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை, சட்டம் ஒழுங்கு ஆகிய முக்கியப் பிரச்சினைகளை நாங்கள் மக்கள் முன் வைக்கிறோம்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் வீட்டுக் கடன் மீதான வட்டியை வெகுவாக குறைப்போம். மேலும், பொருளாதார ரீதியில் நலிவடைந்த நிலையில் இருப்பவர்களையும் இட ஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் கொண்டு வருவோம் என்றார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக மட்டுமே சென்னையில் உள்ள 3 லோக்சபா தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே தேசிய கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.