நளினியை விடுதலை செய்யக் கோரும் மனு - விசாரணைக்கு உகந்ததல்ல: சிபிஐ
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முருகன், சின்ன சாந்தன், பேரறிவாளன் என்கிற அறிவு, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவி ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இவர்களில் ரவி, ஜெயக்குமார், பயாஸ், நளினி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். சின்னசாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது அவர்கள் கருணை மனு தாக்கல் செய்துள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி திருச்சியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு சிபிஐ மற்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதற்கு தமிழக அர சு சார்பில் கூடுதல் உள்துறை செயலாளர் மணி நேற்று நீதிமன்றத்தில் பதில் மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தபிறகு, அந்த தீர்ப்பை விமர்சிக்க அனுமதிக்க முடியாது. தடா கோர்ட் ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் நளினி உள்பட 7 பேருக்கு தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டும் தீர்ப்பு வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டே சி.பி.ஐ. விசாரணையை பாராட்டியுள்ளது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புபடி சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இவர்களை விடுதலை செய்யும்படி ஐகோர்ட்டில் கேபியஸ் கார்பஸ் மனுவை தாக்கல் செய்ய முடியாது. எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. ஆகவே, இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அதேபோல சிபிஐ சார்பில், பல்நோக்கு கண்காணிப்பு குழு போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரமூர்த்தி பதில் மனுவை தாக்கல் செய்தார்.
அதில், இந்த மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு தகுதி கிடையாது. சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியிருப்பதால் இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியாது. மனுதாரர் கூறிய குற்றச்சாட்டு அனைத்தும் தவறானவை. இந்த வழக்கில் ஏற்கனவே சட்டத்தின்கீழ் உள்ள நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.
மேலும், ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கையை தொடர்ந்து, சி.பி.ஐ.யில் பல்நோக்கு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. ஜெயின் கமிஷன் கூறிய கருத்துக்களை பல்வேறு கோணத்தில் இந்த குழு விசாரித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தண்டனை வழங்கி கூறப்பட்டு விட்டதால், இனி எந்த கோர்ட்டும் சட்ட நிவாரணம் பெறமுடியாது.
ஜெயின் கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டிருந்த விஷயங்கள் குறித்து பல்நோக்கு கண்காணிப்பு குழு மேல்விசாரணை செய்து வருவதில் முன்னேற்றம் உள்ளது. இந்த விசாரணையை சென்னை தடா' நீதிமன்றம் கண்காணித்து வருகிறது.
ரகசிய விசாரணையின்போது இந்த குழு அவ்வப்போது விவரங்களை தாக்கல் செய்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி கடைசியாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு தண்டனை வழங்கியுள்ளது என்று யூகத்தின் அடிப்படையில்தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மனுதாரர் பாதிக்கப்பட்ட நபர் அல்ல. இவர்களை விடுதலை செய்யக்கோரி மனுதாக்கல் செய்ய முடியாது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. ஆகவே, கோர்ட்டு செலவை விதித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று இந்த மனு மீது நீதிபதிகள் தீர்ப்பளிக்கவுள்ளனர்.