மது..மகன் சாவு-துயரத்தில் தந்தையும் சாவு
சென்னை: அதிக அளவில் மது அருந்திய மகன் கண் முன்பாக துடிதுடித்து இறந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய தந்தையும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
சென்னை கோடம்பாக்கம் முத்து தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அப்பாதுரை. இவருக்கு 64 வயதாகிறது. சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம். இவருக்கு மனோகரன் (48) என்ற மகன் உள்ளார். மனோகரனின் மனைவி பாக்கியம்.
மனோகரன் மளிகைக் கடை வைத்திருந்தார். அவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
மனோகரனும் அவரது நண்பர்கள் மூன்று பேரும் குறைந்த விலையில் கிடைத்தது என்பதால் ஒரு வாஷிங் மிஷின் வாங்கியுள்ளனர்.
புது மெஷின் வாங்கிய குஷியில் பார்ட்டி வைத்துள்ளனர். மனோகரனும், அவரது நண்பர்களும் சேர்ந்து அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு போய் மது அருந்தியுள்ளனர்.
கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் மது அருந்தினர். இதில் மனோகரனுக்கு போதை அதிகமாகி மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரது நண்பர்கள் மனோகரனை வீட்டுக்குக் கூட்டி வந்தனர்.
அங்கு சிறிது நேரத்தில் துடிதுடித்து மனோகரன் உயிரிழந்தார். இதைப் பார்த்து அவரது தந்தை அப்பாதுரை அதிர்ச்சி அடைந்தார்.
ஒரே மகன் இப்படி மதுவுக்கு பலியானதை நினைத்து அதிர்ச்சி அடைந்து புலம்பிய அவர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு மரணங்களும் ஒரு மணி நேரத்தில் நடந்துவிட்டன.
மகன் மதுவுக்கும், தந்தை அதிர்ச்சியிலும் இறந்தது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.