ஆந்திரா-நீதிபதி மீது ஆசிட் வீசிய சுயேட்சை வேட்பாளர்
காகினாடா: வழக்கில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வழங்காத நீதிபதி மீது சுயேட்சை வேட்பாளர் ஒருவர் ஆசிட் வீசினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதில் காயமடைந்த நீதிபதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சூரியநாராயணா. வரும் தேர்தலில் இவர் காகினாடா நாடாளுமன்ற தொகுதியிலும், பெத்தபுரம் சட்டசபையிலும் சுயேட்சையாக போட்டியிட இருக்கிறார். இவர் தொகுதியில் பலருக்கும் தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக அவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதை நீதிபதி நாகமாருதி சர்மா என்பதை விசாரித்து வருகிறார். இந்நிலையில் அவரது வழக்குகள் அடிக்கடி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் தீர்ப்புகள் அவருக்கு எதிராக சொல்லப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சூரிய நாராயணா, ஆசிட் பாட்டீலை கொண்டு வந்து மற்றொரு வழக்கு விசாரணையில் இருந்த நீதிபதி நாகமாருதி சர்மா மீது வீசினார். ஆசிட் பட்டததை அடுத்து நீதிபதி அலறி துடித்தார். இதில் நீதிபதியின் கழுத்து, கன்னம் மற்றும் காது பகுதிகள் வெந்து போனது. அவர் உடனடியாக அருகிலிருந்த அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நீதிமன்றத்தில் இருந்த வக்கீல்கள் பயத்தில் அலறி அடித்து ஓடினர். அங்கிருந்த போலீசார் தைரியமாக வந்து ஆசிட் பாட்டீலை கையில் வைத்திருந்த சூரிய நாராயணாவை கைது செய்தனர்.
விசாரணையின் போது சூரிய நாராயணா கூறுகையி்ல், என் மீது தொடரப்பட்ட சிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2 ஆண்டு ஆகிறது. ஆனால் விசாரணை தாமதமானது. இதனால் என் வேலை அனைத்தும் பாதிக்கப்பட்டது. எனது வருமான இழப்புக்கு காரணமான நீதிபதிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக ஆசிட் வீசினேன் என்றார்.
இவரது பெயர் செய்தியில் அடிபடுவது இது முதல் முறை அல்ல. கடந்த 2004ல் தனது நில பிரச்சினையை தீர்க்க வேண்டும் என சூரிய நாராயணா கலெக்டர் அலுவலகம் சென்று மாவட்ட அதிகாரி ஒருவரிடம் புகார் கொடுத்தார். அப்பிரச்சினையில் தனக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை என கூறி அங்கேயே பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.












Click it and Unblock the Notifications