விருதுநகர் காங். வேட்பாளர் மாற்றம்-காஞ்சிக்கு விஸ்வநாதன்
டெல்லி: அதிமுக பாணியில் வேட்பாளர் மாற்றத்தை அறிவித்துள்ளது காங்கிரஸ். விருதுநகரில் வைகோவுக்கு எதிராக நிறுத்தப்பட்ட சுந்தரவடிவேலு மாற்றப்பட்டு மாணிக் தாகூர் புதிய வேட்பாளராக்கப்பட்டுள்ளார்.
அதேபோல காஞ்சிபுரத்திற்கும் வேட்பாளரை அறிவித்துள்ளது காங்கிரஸ்.
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் போட்டியிடும் 15 தொகுதிகளில் காஞ்சிபுரத்திற்கு மட்டுமே வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இரு்ந்தது.
தற்போது அத்தொகுதியில் பி.விஸ்வநாதன் போட்டியிடுவார் என காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.
விருதுநகர் வேட்பாளர் சுந்தரவடிவேலுக்கு எதிராக அங்கு பெரும் போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து அவர் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் அதிமுகவைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர் மாற்றத்தை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த மாணிக் தாக்கூர்..?:
விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மாணிக் தாக்கூர், பெயரில் வடக்கத்திக்காரர் போல தெரிந்தாலும், சிவகங்கை அருகே உள்ள ஏரியூரைச் சேர்ந்தவர்.
காங்கிரஸ் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ராஜ்யசபா உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பனின் அண்ணன் மகன் ஆவார்.
சுப்ரீம் கோர்ட் வக்கீலான இவர் தமிழக இளைஞர் காங்கிரஸ் பொருளாளராக இருக்கிறார்.
சுந்தரவடிவேலுவுக்கு விருதுநகர் தொகுதியில் கடும் எதிர்ப்பு நிலவியதால், அவருக்குப் பதில் மாணிக் தாக்கூர் வேட்பாளராகியுள்ளார்.
ஏற்கனவே இவருக்கு சுதர்சன நாச்சியப்பன் கட்சியில் சீட் கேட்டிருந்தார். ஆனால் கிடைக்கவில்லை. ஆனால் இப்போது விருதுநகர் தொகுதி அதிர்ஷ்டவசமாக கிடைத்துள்ளது.