ராஜபக்சேவின் சகோதரர் இந்தியா விரைகிறார்
இலங்கை ராணுவத் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் பெருமளவில் பலியாகி வரும் நிலையில், போர் நிறுத்ததுக்கு உலக நாடுகள் இலங்கையை நெருக்கி வரும் நிலையில் இவர் இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது. அதிபர் ராஜபக்சேவின் சகோதரரான இவர் அமைச்சராகவும் உள்ளார்.
இது குறித்து அமைச்சர் யபா அபேவர்த்தனே கூறுகையில், இந்திய அதிகாரிகளுடன் பாசில் ராஜபக்சே பேச்சு நடத்துவார். தீவிரவாதம் விஷயத்தில் இந்தியா தனது நிலையில் உறுதியாக உள்ளது. இதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்போது கூட புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையலாம். அவ்வாறு செய்தால் அவர்கள் விரும்பிய இடத்துக்கு சென்றுவிடலாம் என்றார்.
போரை நிறுத்த முடியாது: ராஜபக்சே:
இதற்கிடையே முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கைப் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்த வேண்டிய அவசியமே இல்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை என்று இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுனிடம், அதிபர் ராஜபக்சே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வன்னி நிலவரம் பெரும் துயரமாக மாறி வருகிறது. இது லண்டனில் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாடாளுமன்றம் முன்பாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு பிரதமர் கார்டன் பிரவுன், இலங்கை அதிபர் ராஜபக்சேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். ஆனால் அதை ஏற்க முடியாது என்று கூறி ராஜபக்சே நிராகரித்து விட்டாராம்.
பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து 35 ஆயிரம் மக்கள் வெளியேறி வந்துள்ளார்கள். எனவே இந்த சமயத்தில், போர் நிறுத்தம் அவசியமற்றது என்று அவர் பிரவுனிடம் கூறியதாக அதிபர் மாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன.