ராசா-இல.கணேசன், டி.ஆர் வேட்பு மனு தாக்கல்
சென்னை: லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
லதிமுகவின் நடிகர் மன்சூர் அலிகான் திருச்சியில் போட்டியிடுகிறார். அவரது கட்சித் தலைவரான ராஜேந்தர் கள்ளக்குறிச்சியில் போட்டியிடுகிறார்.
அதன்படி இன்று கள்ளக்குறிச்சியில் போட்டியிட ராஜேந்தர் மனு தாக்கல் செய்தார். அதேபோல திமுக, அதிமுக வேட்பாளர்களும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ததால்
கள்ளக்குறிச்சியில் தொண்டர்கள் கூட்டம் அலை மோதியது.
இத்தொகுதியில் விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ் போட்டியிடுகிறார். அவர் நாளை மனு தாக்கல் செய்கிறார்.
முன்னதாக நாளையே தானும் வேட்பு மனு தாக்கல் செய்யப் போவதாக கூறியிருந்தார் ராஜேந்தர். ஆனால் இரு கட்சியினருக்கும் இடையே ஏதாவது ஆகி விட்டால் என்ன செய்வது என்று குழம்பிய போலீஸார் இரு தரப்பையும் அழைத்து ஆளுக்கு ஒரு நாள் மனு தாக்கல் செய்யுங்கள் என்று அட்வைஸ் கொடுத்தது.
இதையடுத்து முன்கூட்டியே இன்றே வேட்பு மனுத் தாக்கல் செய்வதாக ராஜேந்தர் அறிவித்தார். அதன்படி இன்று மனு தாக்கல் செய்தார்.
ராசா நீலகிரியில் மனு தாக்கல்..
நீலகிரி தொகுதி திமுக வேட்பாளரான ராசா இன்று ஊட்டியில் மனு தாக்கல் செய்தார்.
அவருடன் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.பி.பிரபு வந்திருந்தார்.
மனு தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்கள் ராசாவிடம் தேர்தலில் இலங்கை பிரச்னை எதிரொலிக்குமா என கேட்டனர். அதற்கு இலங்கை பிரச்னையை முதல்வர் கருணாநிதி சரியான முறையில் கையாண்டு வருகிறார் என்றார்.
திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் என்.எஸ்.வி. சித்தன், தூத்துக்குடி திமுக வேட்பாளர் ஜெயதுரை ஆகியோரும் இன்று மனு தாக்கல் செய்தனர். ஜெயதுரையுடன் அமைச்சர் மு.க.ஸ்டாலினும் உடன் வந்தார்.
அதே போல பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் இன்று தென் சென்னை தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.