வாக்காளர்களுக்கு பணம்-சிரஞ்சீவியை தாக்க முயன்ற காங்கிரஸார்
ஹைதராபாத்: வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக கூறி திருப்பதியில் பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவர் நடிகர் சிரஞ்சீவியைத் தாக்க காங்கிரஸார் முயன்றனர். இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
ஆந்திராவில் சட்டசபைக்கும், லோக்சபா தொகுதிகளுக்கும் இன்று 2வது கட்ட தேர்தல்நடந்து வருகிறது.
சிரஞ்சீவி போட்டியிடும் திருப்பதி சட்டசபைத் தொகுதியிலும் இன்று வாக்குப் பதிவு நடக்கிறது. இதையொட்டி அவர் திருப்பதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பிருந்தே முகாமிட்டுள்ளார்.
திருப்பதியில் உள்ள ஹோட்டலில் அவர் தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று அங்கு 200க்கும் மேற்பட்ட காங்கிரஸார் வந்தனர்.
சிரஞ்சீவி கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக கூறி கோஷமிட்டனர். எனவே சிரஞ்சீவி அறையை சோதனையிட வேண்டும் என்று கூறி போராட்டத்தில் குதித்தனர்.
இதைத் தொடர்ந்து போலீஸார் அங்கு வந்தனர். காங்கிரஸ் கட்சியினரின் கோரிக்கையைத் தொடர்ந்து பிரஜா ராஜ்ஜியம் கட்சியினரின் வாகனங்களை சோதனையிட்டனர். ஆனால் பணம் கிடைக்கவில்லை.
இதையடுத்து பிரஜா ராஜ்ஜியம் கட்சியினருக்கும், காங்கிரஸாருக்கும் இடையே மோதல் மூண்டது. அடிதடியில் இரு தரப்பினரும் குதித்தனர்.
அவர்களை சமாதானப்படுத்த சிரஞ்சீவி முயன்றார். அப்போது காங்கிரஸார் சிலர் சிரஞ்சீவியைத் தாக்க முயன்றனர்.
நிலைமை மோசமானதைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தி அனைவரையும் விரட்டியடித்தனர். பின்னர் சிரஞ்சீவியின் பாதுகாப்பை முன்னிட்டு போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சிரஞ்சீவி கூறுகையில், வேண்டும் என்றே தவறான வீண் புகார்களை கூறி வருகிறார்கள். வெளிமாவட்டங்களில் இருந்து சமூக விரோதிகளையும் ரவுடிகளையும் கொண்டு வந்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.
என்னை தாக்கவும் முயற்சி நடந்தது. திருப்பதி தொகுதியில் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வாக்குப்பதிவு நடைபெற தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications