இலங்கைக்கான இந்திய தூதர் டெல்லி விரைந்தார்!
டெல்லி: இலங்கைக்கான இந்திய தூதர் அலோக் பிரசாத் திடீரென டெல்லி விரைந்துள்ளார். வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இலங்கையில் நிலைமை நாளுக்கு நாள் படு மோசமாகி வருகிறது. பெருமளவில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
போரை கிட்டத்தட்ட முடிக்கும் நிலைக்கு இலங்கை ராணுவம் கொண்டு வந்துள்ளது. இருப்பினும் புலிகள் வசம் உள்ள பகுதிகளில் பெருமளவிலான மக்கள் இன்னும் இருப்பதால் ராணுவ நடவடிக்கையால் அவர்களின் உயிருக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்கு நெருக்குதல் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கைக்கான இந்திய தூதர் அலோக் பிரசாத் இன்று திடீரென டெல்லி விரைந்தார். டெல்லி வந்து சேர்ந்ததும் நேராக பிரணாப் முகர்ஜியை அவர் சந்தித்துப் பேசினார்.
அலோக் பிரசாத்தின் திடீர் வருகை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதற்கிடையே, இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தூதுவராக அவரது தம்பி பசில் ராஜபக்சேவும் இன்று டெல்லி வருகிறார்.
இதனால் இலங்கை விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.