பிரதமர்-முகர்ஜி அவரச ஆலோசனை, போர் நிறுத்தம் கோர இந்தியா முடிவு
டெல்லி: தமிழர்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என இலங்கையை வலியுறுத்துவது என பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்த அவசரக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டு வருகின்றனர். பெருமளவில் உயிரிழப்பு அதிகரித்துள்ளதால் ஈழ நிலை மிகவும் அவல நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது.
அப்பாவி தமிழர்களைக் காப்பாற்ற போர் நிறுத்தம் அறிவிக்குமாறு இலங்கை அரசை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா. சபையும் வற்புறுத்தி வருகின்றன. ஆனால் போர் நிறுத்தம் செய்ய முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே பிடிவாதமாக கூறி வருகிறார்.
ஆனால் இந்திய அரசு இதுவரை உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது. தமிழக முதல்வர் கருணாநிதி மத்திய அரசை பலமுறை வற்புறுத்தியும் அது அசைந்து கொடுப்பதாக இல்லை.
இலங்கையுடன் தூதரக உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டும் என்று கோரி கருணாநிதி தந்தி அடித்தார். அதற்கும் பலன் இல்லை. இறுதிக் கெடு விதிக்க வேண்டும் என்று கோரி இன்னொரு தந்தி அடித்தார். மேலும், முழு அடைப்புப் போராட்டத்தையும் அவர் அறிவித்தார்.
இதையடுத்து நேற்று இரவு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், அவசர ஆலோசனை நடைபெற்றது.
பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.எஸ்.மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், இலங்கையில் போர்ப் பகுதியில் நிலவும் சூழ்நிலை, அப்பாவி தமிழர்கள் மீதான ராணுவ தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள அப்பாவி தமிழர்களுக்கு தேவையான உணவு, மருந்துகள் மற்றும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைப்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கருணாநிதி விடுத்த கோரிக்கை பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது. கருணாநிதி கோரிக்கையை ஏற்று, உடனடியாக போரை நிறுத்துமாறு இலங்கை அரசிடம் வற்புறுத்துவது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
இதுதொடர்பாக, விரைவில் இலங்கை அரசிடம் இந்தியா அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுக்கும்.
கூட்டத்திற்குப் பின்னர் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் தொடர்ந்து அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டு வருவது எங்களை மிகவும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை.
இந்தக் கொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றார்.
தங்களை சந்திக்க வரும் இலங்கை அதிபரின் சிறப்புத் தூதரான பாசில் ராஜபக்சேவிடம் போர் நிறுத்தத்தை வலியுறுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications