'அரசியல் சாசனத்தை அவமதித்த கருணாநிதி'-சாமி
சென்னை: பந்த் நடத்தியதன் மூலம் அரசியல் சாசனச் சட்டத்தை அவமதித்து விட்டார் முதல்வர் கருணாநிதி என்று கூறியுள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சாமி.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் போர் நிறுத்தம் கோரி மத்திய அரசை நெருக்குவதற்காக பந்த்துக்கு அழைப்பு விடுத்திருக்கும் கருணாநிதியின் செயல் அரசியல் சாசனச் சட்டத்திற்குப் புறம்பானது. அரசியல் சாசனச் சட்டத்தையே அவமதித்து விட்டார் கருணாநிதி.
எனவே உடனடியாக தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். மத்திய படைகளை இங்கு அனுப்பி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை போர்ப் பகுதியில் இருந்து வந்த தமிழர்கள் ஏற்கனவே தப்பி அரசுப் பகுதிக்கு வந்து விட்டனர். விடுதலைப் புலிகள் கதை முடிந்து விட்டது. பிரபாகரன் இன்னும் சில நாட்களில் உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிபடுவார்.
தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பந்த் நடத்துவது தேவையற்றது.
இப்படிப்பட்ட நேரத்தில், பந்த் நடத்த கருணாநிதி அழைப்பு விடுத்திருப்பது ஒரு முதல்வராக தனது கடமையிலிருந்து தவறியதையே வெளிக்காட்டுகிறது.
அதேபோல தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடும் வகையில் நடந்து கொண்டுள்ள வைகோ, நெடுமாறன் போன்றோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் சாமி.