திமுக பந்த்தை எதிர்த்து சென்னை வக்கீல் வழக்கு
சென்னை: திமுக இன்று நடத்திய முழு அடைப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஞானசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக ஞானசேகரன் தாக்கல் செய்துள்ள பொது நலன் மனுவில், ஆளுங்கட்சி இன்று முழு அடைப்பு நடத்துகிறது. மே 13-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதன் பணிகளை பாதிக்க செய்யும் வகையில் முழு அடைப்பு நடத்துகின்றனர்.
முழு அடைப்பினால் இன்று பஸ், ரெயில் போன்ற போக்குவரத்து வாகனங்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள் வேலைக்கு வர முடியவில்லை.
முழு அடைப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே சில உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில் போராட்டம் இருக்க கூடாது என்று கூறியுள்ளது. ஆனால் அதை மீறி உள்ளனர். எனவே ஆளுங்கட்சி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீபதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.