சோனியா படத்தை செருப்பால் அடித்து வக்கீல்கள் போராட்டம்
கோவை: கோவை நீதிமன்ற வளாகத்துக்குள் போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் திடீரென காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உருவ ப்படத்தை செருப்பால் அடித்தனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கை ராணுவம் அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்கும் கொடூர செயலுக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து தமிழகத்தில் மீண்டும் போராட்டங்கள் துவங்கியுள்ளன.
இந் நிலையில் கோவை நீதிமன்றத்தி்ல் வழக்கறிஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பிய வழக்கறிஞர்கள் திடீரென காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உருவ ப்படத்தை செருப்பால் அடித்தனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கோர்ட்டு வளாகத்துக்குள் போராட்டம் நடந்ததால் போலீசார் உள்ளே செல்லவில்லை. கோர்ட்டு வாயிலின் முன் துணை கமிஷனர் சண்முகவேல் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ராஜபக்சே, சோனியா உருவப் பொம்மை எரிப்பு
அதே போல அரியலூர் நீதிமன்றம் முன் வக்கீல்கள் திருமாவளவன், ஜெயக்குமார், துரைராஜ் உள்பட 50க்கும் மேற்பட்ட வக்கீல்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
இலங்கை தமிழர் படுகொலையை தடுக்க போர் நிறுத்தம் அறிவிக்க உதவாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் போட்டனர். பின்னர் அவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவபொம்மையை தீ வைத்து கொளுத்தினர்.
இந்நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய அரியலூர் வந்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். சிறிது நேரம் அங்கிருந்த இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய அவர் பி்ன்னர் கிளம்பி சென்றார்.
திருமாவளவனுக்கு சங்கடத்தை ஏற்படுத்த கூடாது என அவர் இருக்கும் வரை திமுக, காங்கிரசை எதிரித்து கோஷம் போடாமல் அமைதி காத்த வாக்கீல்கள். அவர் சென்றவுடன் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.
இதையடுத்து திமுக கூட்டணி கட்சியினருக்கும், வக்கீல்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அது மெல்ல கைகலப்பாக மாறியது. இதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சிலரின் சட்டைகள் கிழிக்கப்பட்டன.
அப்போது அங்கு வந்த திமுக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் திமுக கூட்டணியினரை அமைதியாக கலைந்து செல்லுமாறு கேட்டு கொண்டார். வக்கீல்களை போலீசார் சமாதானப்படுத்தி நீதிமன்றத்துக்குள் அனுப்பி வைத்தனர்.
செங்கல்பட்டில் சோனியா உருவபொம்மை எரிப்பு...
இலங்கையில் போர் நிறுத்தம் கோரியும், சேலம் சட்டக்கல்லூரி மாணவர்களை கைது செய்ததை கண்டித்தும் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று திடீரென போராட்டம் நடத்தினர். அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்தவமனை முன்பு சாலை மறியல் செய்தனர். பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் உருவ பொம்மையை எரித்தனர்.
இதை தொடர்ந்து அந்த பகுதி வழியாக புதுச்சேரியில் இருந்து தாம்பரத்துக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்றின் முன் பக்க விளக்குகளை சில மாணவர்கள் அடித்து உடைத்தனர். பின்னர் மற்றொரு அரசு பஸ்சுக்கும் சேதம் விழைவித்தனர். இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 20 மாணவர்களை கைது செய்தனர்.
சேலத்தில் இரண்டாவது நாளாக போராட்டம்...
நேற்று முன்தினம் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய சில சட்டக்கல்லூரி மாணவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு முதல் சிறைக்குள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்த செய்தியை கேள்விபட்ட மற்ற மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்.
இதையடுத்து நேற்று இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்தது. அவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் சேலம் மத்திய சிறைக்கு சென்று கைது செய்தவர்களை பார்க்க வேண்டும் என அனுமதி கேட்டனர்.
அப்போதும் அவர்களுக்கும், சிறை காவலர்களக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்ப்டடது. இதையடுத்து மாணவர்கள் சிறை வாசலில் ஆர்ப்பாட்டமும் செய்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாநகர துணை போலீஸ் கமிஷனர் ஜான் நிக்கல்சன் உத்தரவின் பேரில் சிறை வாசலில் போராட்டம் நடத்திய 10 மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.