தமிழர்கள் படுகொலை: இலங்கையின் செயல் பெரும் ஏமாற்றமளிக்கிறது - ஹில்லாரி கிளிண்டன்
வாஷிங்டன்: 25 ஆண்டு கால போரை முடிவுக்குக் கொண்டு வருவதாகக் கூறிக் கொண்டு இலங்கை அரசு செயல்பட்டு வரும் விதம், உலக நாடுகளை மிகப் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையின் செயலால் சொல்லொணாத் துயரத்தில் அப்பாவித் தமிழர்கள் மூழ்கியுள்ளனர் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க செனட் சபையின் வெளியுறவு விவகார கமிட்டியின் முன்பு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஹில்லாரி பேசுகையில், ஒட்டு மொத்த உலக சமுதாயமும் இலங்கையின் செயலால் பெரும் ஏமாற்றத்தை அடைந்துள்ளன. 25 ஆண்டு கால போரை முடிவுக்குக் கொண்டு வருவதாக கூறிக் கொண்டு இலங்கை அரசு செயல்படும் விதம், அப்பாவித் தமிழர்களை பெரும் இன்னலுக்குள்ளாக்கியுள்ளது.
வரலாறு காணாத மோசமான மனித உரிமை பேரவலம் இலங்கையில் நிலவுகிறது. போரை நிறுத்த வேண்டும், அப்பாவிகள் வெளியேற வழி வகை செய்ய வேண்டும் என அமெரிக்க அரசு தொடர்ந்து இலங்கையை வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதை இலங்கை அரசு கேட்பதாக இல்லை.
போரை சற்றே நிறுத்தி அப்பாவிகள் வெளியேற வழிவகுக்கவும், மனிதாபிமான உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்யவும், அரசியல் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் எனவும் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என்றார் ஹில்லாரி.












Click it and Unblock the Notifications