For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்காளர் பட்டியலில் சேர்க்க 8.4 லட்சம் மனுக்கள்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் இணைப்பு பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகத்தில் 8 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளார்கள். அதிகபட்சமாக மதுரையி்ல் இருந்து 1 லட்சத்து 12 ஆயிரம் வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர் என தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டபிறகு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டது. அதன்பிறகு, இணைப்பு பட்டியல் தயாரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர் இணைப்புப் பட்டியலில் பெயர் சேர்க்க இம்மாதம் 13ம் தேதி வரை 8.40 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

மதுரையில் மட்டும் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 334 விண்ணப்பங்களும், அடுத்ததாக சென்னையில் 73 ஆயிரத்து 113, கோவையில் 61 ஆயிரத்து 427, திருவள்ளூரில் 50 ஆயிரத்து 393, திருச்சியில், 45 ஆயிரத்து 583 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இதுவரை இல்லாத வகையில் அதிகளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளதால், மே முதல் வாரம் தான் இணைப்புப் பட்டியல் இறுதி செய்யப்படும். விண்ணப்பங்களைப் பெற்றதும், தகவல்களை பதிவு செய்து, புகைப்படங்களை ஸ்கேனிங் செய்து, அவற்றை ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட வேண்டியுள்ளது.

அதுபோல், விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, ஏற்கனவே வெளியிடப்பட்டிருக்கும் புகைப்பட வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அதன்பிறகே மனுவின் மீது மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பாக தீர ஆய்வு செய்தே மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு, கடந்த 20 மற்றும் 21 தேதிகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிறப்பு சான்றிதழ் அவசியம்...

18 முதல் 24 வயதுக்குட்பட்ட புதிய வாக்காளர்களாக இருந்தால், அவர்களது பள்ளி சான்றிதழை, வயதுக்கான ஆதாரமாக இணைக்க வேண்டியது அவசியம். பெயர்கள் சேர்ப்பதில் மிகவும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

ஏற்கனவே, ஆண்டுதோறும் நடத்தப்படும் திருத்தப் பணி, தொகுதி வரையறைக்கு பின் நடத்தப்பட்ட திருத்தப் பணி என பெயர்களை சேர்க்க பல வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே, நேரம் குறைவாக இருப்பதால் இந்த சமயத்தில் 'ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை. மிகவும் நம்பத்தகுந்த வாக்காளர்களின் பெயர்களை மட்டும் சேர்க்குமாறு கூறியுள்ளோம்.

தேர்தல் அறிக்கை, துண்டு பிரசுரம் போன்றவற்றை வினியோகிக்கும் போது, அதற்குள் வாக்காளரின் பெயர், ஓட்டுச்சாவடி பெயர் போன்ற விவரங்கள் கொண்ட சீட்டுகளை வைக்கக் கூடாது. வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதை ரகசியமாக வைத்திருக்க உத்தரவிட்டுள்ளோம்.

ஓட்டுப் போடுவதை வீடியோவில் படமெடுத்தல் அல்லது இதர தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு கண்காணித்தல் கூடாது. அவ்வாறு செய்வதால், ஓட்டுப் போட்ட வாக்காளர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. பொது வேலைநிறுத்தம் காரணமாக, மனு தாக்கல் பாதிக்கப்பட்டதாக தெரியவில்லை. ஆட்டோக்கள், கார்கள் ஓடியதால், மனு தாக்கல் செய்ய வாய்ப்பிருந்தது.

ரகசிய மைக்ரோ பார்வையாளர்கள்...

'மைக்ரோ' பார்வையாளர்களின் விவர பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் எந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என்பதை, குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் வகையில் சாப்ட்வேர் வழங்கப்பட்டுள்ளது.

'மைக்ரோ' பார்வையாளர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும். தேர்தல் பணியில் இருப்பவர்களுக்குக் கூட, இவர்களை தெரியாது. இவ்வாறு நரேஷ் குப்தா தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X